82வது போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 82வது போட்டி நேற்றைய தினம் கோவாவின் வாஸ்கோடகாமாவின் திலக் மைதானத்தில் நடைற்றது. இதில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதிய நிலையில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் பெடரிகோ கலீகோவின் சிறப்பான இரண்டு கோல்களால் போட்டி 2க்கு 2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
முன்னணியில் இருந்த கோவா
முன்னதாக கோவாவின் அலெக்சாண்டர் ரோமாரியோ ஜேசுராஜ் கோவாவின் கோல் கணக்கை 21வது நிமிடத்தில் துவக்கி வைத்த நிலையில், அந்த அணி முன்னணியில் இருந்தது. தொடர்ந்து 80வது நிமிடத்தில் அந்த அணியின் வீரர் குர்ஜிந்தர் குமார் மற்றொரு கோலை அடித்தார்.
தோல்வியிலிருந்து காப்பாற்றிய கலீகோ
ஆயினும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் கலீகோ அடுத்தடுத்து 41 மற்றும் 83வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து தனது அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றி அழைத்து சென்றார். முதல் பகுதியின் இரண்டாவது நிலையில் கோல் அடிக்கும் வாய்ப்புகளை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
3வது இடத்திற்கு தாவிய கோவா
இரு அணிகளும் சமநிலையில் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்காக போட்டியிட்ட நிலையில் தற்போது இரு அணிகளும் போட்டியை டிரா செய்துள்ளன. ஆயினும் எப்சி கோவா அணி புள்ளிகள் அடிப்படையில் ஐதராபாத் அணியை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தை பிடித்துள்ளது. நார்த்ஈஸ்ட் அணி 5வது இடத்தில் உள்ளது.