ரியோடி ஜெனிரோ: நாக்-அவுட் சுற்றில் இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் அர்ஜெண்டினாவும், சுவிட்சர்லாந்தும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. மெஸ்சி மேஜிக்கை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
குரூப் போட்டிகள் அனைத்திலுமே வெற்றி கண்டுள்ள அர்ஜெண்டினா, நாக்-அவுட் போட்டியில் இன்று பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. உலக கோப்பையின் நடப்பு போட்டித்தொடரில், இதுவரை நான்கு கோல்கள் அடித்து, முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்சியை நம்பிதான் அந்த அணி உள்ளது.
இந்த ஆட்டத்திலும் அவர் தனது வழக்கமான மாஜிக்கை காண்பிப்பார் என்கிறார்கள் ரசிகர்கள். லீக் போட்டிகளில் ஈக்குவெடாருடன் 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கிலும், ஹோண்டுராசுடன் 3-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ள சுவிட்சர்லாந்தை மடக்க அர்ஜெண்டினா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறும் நாக்-அவுட் சுற்றின் மற்றொரு, போட்டியில் அமெரிக்காவும்-பெல்ஜியமும் மோதுகின்றன.