மாஸ்கோ: உலகின் தலைச் சிறந்த வீரரான லியோனல் மெஸ்ஸி, அறிமுக அணியான ஐஸ்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் திணறியது கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இதில் டி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா, ஐஸ்லாந்து அணிகள் மோதின.
நேற்று நடந்த போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ஆளாக விளையாடி ஹாட்ரிக் கோலடித்தார். அதனால் அந்த ஆட்டத்தில் மிகவும் வலுவான ஸ்பெயின் அணிக்கு எதிராக 3-3 என போர்ச்சுகல் டிரா செய்தது.
இன்று நடந்த ஆட்டத்தில் தான் உலகக் கோப்பையில் முதல் முறையாக ஐஸ்லாந்து அறிமுகமாகிறது. அதனால், இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி அபாரமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்ற அவருக்கு, இன்றைய ஆட்டத்தில் 11 முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஒன்றைக் கூட கோலாக்கவில்லை.
உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் 1990ல் கேமரூனுக்கு எதிராக அர்ஜென்டினா 1-0 என தோல்வி அடைந்தது. அதன்பிறகு முதல் ஆட்டத்தில் வெற்றி பெறாதது இதுவே முதல் முறையாகும். மெஸ்ஸியின் மேஜிக் பலிக்காததால், உலகக் கோப்பையில் அர்ஜென்டினா தேறுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.