டிராவில் முடிந்த போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடர் கோவாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 9 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்றைய போட்டியில் ஐதராபாத் எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் மோதிய நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் போடாமல் போட்டியை டிரா செய்தன.
6வது இடத்தில் பெங்களூரு அணி
இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் ஐதராபாத் அணி 3வது இடத்தில் சிறப்பான துவக்கத்தில் உள்ளது. ஆனால் பெங்களூரு அணி இதுவரை ஒரு வெற்றியையும் பெறாத நிலையில் 6வது இடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் அந்த அணியின் வீரர்கள் காணப்பட்டனர்.
சிறப்பான தடுப்பாட்டம்
ஆனால் அவர்களின் முயற்சிக்கு இடம் கொடுக்காமல் ஐதராபாத் அணி வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தை விளையாடினர். இரு அணி வீரர்களும் கோல் போட மேற்கொண்ட முயற்சி ஒன்று தடுக்கப்பட்டது அல்லது வேறு திசைக்கு பந்து சென்றது. இதையடுத்து கோல் போடும் இரு அணிகளின் முயற்சிகளும் தோல்வியை கண்டது.
வீணான கோல் போடும் முயற்சி
கோவாவின் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி, கிறிஸ்டியன் ஆப்செத் மற்றும் உதாண்டா சிங் போன்ற முக்கிய வீரர்களின் கோல் போடும் முயற்சிகளும் பலன் கொடுக்கவில்லை. இதேபோல 55வது நிமிடத்தில் ஐதராபாத் அணியின் அரிடேன் சாந்தனாவின் முயற்சியும் எதிரணியின் சிறப்பான டிபன்சால் வீணானது.