நெய்மார் காயம்
செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் பிரேசில் கேப்டனும், நட்சத்திர வீரருமான நெய்மார் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியது. அந்த போட்டியின் 79வது நிமிடத்தில், எதிரணியின் தடுப்பை தகர்த்து நெய்மார் பந்தை கடத்தி சென்றார். அப்போது எதிரணி வீரர் பந்தை பறிக்க முயன்றபோது, நெய்மார் கால் இடறி கீழே விழுந்தார்.
கண் கலங்கிய நெய்மார்
இதில் நெய்மாருக்கு கணுக்காலில் ஏற்பட்ட வலியால் மைதானத்திலேயே துடித்தார். இதன்பின்னர் பிரேசில் அணியின் மருத்துவர் மைதானத்திற்கு வந்து நெய்மாரை பரிசோதனை செய்தனர். இதன் பின்னர் நெய்மார் போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டார். அதேபோல் மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த போது, அவரது கண்கள் கலங்கின.
பிரேசில் அறிவிப்பு
இந்த நிலையில் சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகளுக்கு எதிரான போட்டியில் நெய்மார் பங்கேற்க மாட்டார் என்று பிரேசில் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. நெய்மாருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதற்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த நிலையில் காயம் குறித்து நெய்மார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நெய்மார் பதிவு
அந்த பதிவில், ஒவ்வொரு முறையும் பிரேசில் ஜெர்சியை காதலுடன் அணியும் போது பெருமையாகவும் உணர்வேன். ஒருவேளை கடவுள் என்னிடம் வந்து எந்த நாட்டில் பிறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டால், பிரேசில் என்றே பதில் அளித்திருப்பேன். என் வாழ்க்கையில் இலக்கை எட்டுவது எப்போதும் சுலபமாக இருந்ததில்லை. இன்றைய நாள் மிகவும் கடினமாக இருக்கிறது. உலகக்கோப்பைத் தொடரின் போது காயமடைந்துள்ளேன். நிச்சயம் காயத்தில் இருந்து வேகமாக மீண்டு வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.