கொல்கத்தா : இந்தியாவின் கால்பந்து ஜாம்பவான் பிகே பானர்ஜீ கொல்கத்தாவில் கடந்த மார்ச் 20 அன்று மறைந்தார். அவருக்கு வயது 83 ஆகும்.
வயதான காரணத்தால் அவருக்கு பல உடல் உபாதைகள் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மார்ச் 20 அன்று மறைந்தார்.
இந்திய கால்பந்தின் வசந்த காலத்தில் அதை வழிநடத்தி சென்றவர் பிகே பானர்ஜீ. மேலும், இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரராகவும் விளங்கினார் அவர்.
இவர் ஜூன் 23, 1936 அன்று மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி நகரில் பிறந்தார். பின் இளம் வயதில் ஜாம்ஷெட்பூருக்கு சென்றார்.
1962 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு தங்கம் வென்று கொடுத்தார். 1960 ரோம் ஒலிம்பிக் தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிராக ஒரு கோல் அடித்து போட்டியை 1 - 1 என சமன் செய்தார். பிரான்ஸ் உலகின் முன்னணி அணியாக விளங்கிய நிலையில் இந்த சாதனையை செய்தார் அவர்.
அதற்கும் முன் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் தொடரில் ஆஸ்திரேலிய அணியை 4 - 2 என காலிறுதியில் வீழ்த்த பிகே பானர்ஜீ முக்கிய காரணமாக விளங்கினார்.
அவர் 84 சர்வதேச போட்டிகளில் ஆடி 65 கோல் அடித்துள்ளார். இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரராக பல காலம் விளங்கினார். அவரது கோல் சாதனை நீண்ட காலமாக இந்திய அளவில் முறியடிக்கப்படாமல் இருந்தது.
பிகே பானர்ஜீ கடந்த சில காலமாக நோய்களால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பார்கின்சன்ஸ், டிமென்ஷியா, இதயக் கோளாறு ஆகியவை இருந்தது. கடந்த மார்ச் 2 அன்று நிமோனியாவால் ஏற்பட்ட நுரையீரல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், மார்ச் 20 அன்று மறைந்தார்.