சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பி பிரிவில் இன்று நடந்த மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போல, கடைசி நிமிடத்தில் கோலடித்து ஈரான் திரில் வெற்றி பெற்றது. மொராக்கோ வீரர் சேம் சைடு கோலடிக்க ஈரான் வென்றது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இந்த உலகக் கோப்பைக்கான ஆட்டங்கள் துவங்கியுள்ளன. முதல் நாளில் நடந்த முதல் ஆட்டத்தில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது. இன்று நடந்த ஏ பிரிவு ஆட்டத்தில் உருகுவே 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை வென்றது. பி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஈரான் அணிகள் மோதின.
----
பிரிவு பி
ஈரான் - மொராக்கோ
1 - 0
----
உலகக் கோப்பையில் மொராக்கோ இதுவரை விளையாடியுள்ள 13 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்றுள்ளது. 7ல் தோல்வியும், 4ல் டிராவும் செய்துள்ளது.
அதே நேரத்தில் ஈரான் இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. 8ல் தோல்வி, 3ல் டிரா செய்துள்ளது. 1998ல் அமெரிக்காவுக்கு எதிராக அது வென்றது.
1998க்குப் பிறகு உலகக் கோப்பையில் மொராக்கோ பங்கேற்கிறது. அதே நேரத்தில் ஈரான் தொடர்ந்து இரண்டாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறது.
இன்று நடந்த ஆட்டத்தில் மொராக்கோ அணியின் பக்கமே பந்து அதிக நேரம் இருந்தது. கிட்டத்தட்ட 69 சதவீத நேரம் மொராக்கோ வீரர்களிடமே பந்து இருந்தது. அனைத்து விதத்திலும் ஈரானை விட மொராக்கோ முன்னிலையில் இருந்தது. 13 ஷாட்களை அடித்தது, அதில் 3 கோல் பகுதிக்கு சென்று தடுக்கப்பட்டது.
அதே நேரத்தில் ஈரான் அணியும் விட்டுக் கொடுக்காமல் விளையாடியது. மொராக்கோவின் கோலடிக்கும் வாய்ப்புகளை அடுத்து தடுத்தது.
இரு அணிகளும் மாறி மாறி தடுப்பாட்டம், ஆக்ரோஷமான முன்கள ஆட்டத்தில் ஈடுபட்டாலும், கோல் ஏதும் விழவில்லை. அட போங்கப்பா, ஆட்டம் டிராவில் முடியும் என்று நினைக்கப்பட்ட நேரத்தில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மொராக்கோவின் போஹாதூஸ் சேம் சைட் கோலடிக்க, ஈரான் வென்றது.
இதன் மூலம், பி பிரிவில் 3 புள்ளிகளுடன் ஈரான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகக் கோப்பையில் ஈரானுக்கு கிடைத்துள்ள இரண்டாவது வெற்றி இதுவாகும்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி நேரத்தில் திரில் வெற்றியைப் பெறுவதுபோல, ஈரான் கடைசி நேர கோலால் திரில் வெற்றி பெற்றுள்ளது.