கவுகாத்தி : பெங்களூரு - நார்த் ஈஸ்ட் அணிகளுக்கிடையே டிசம்பர் 5 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 1- 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 49 ஆவது கால்பந்து போட்டி கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிக்கும் பெங்களூரு எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் விறுவிறுப்பாக விளையாடினர். புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அணிகள் மோதுவதால் ஆட்டம் கடுமையாக இருந்தது. முதல் பாதியில் இரு அணிகளுக்கும் பல முறை கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை வீரர்கள் நழுவவிட்டனர்.
இதையடுத்து கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அந்த ஒரு நிமிடத்திலும் யாரும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்காததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. இதிலும் இரண்டு அணி வீரர்களும் மிகக் கடுமையாக மோதினர்.
ஆட்டத்தின் 56 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்து. ஆனால், நார்த் ஈஸ்ட் அணியில் கோல் கீப்பர் அதை தடுத்து நிறுத்தினார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ஃபெடரிகோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் குர்பிரீத் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. மேலும் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்லோமிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சென்ச்நோ ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இரண்டாம் பாதி முடிவில் கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெங்களூரு - நார்த் ஈஸ்ட் அணிகளுக்கிடையே நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 1- 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
(Photos Courtesy - ISL)