பெங்களூரு : பெங்களூரு ஸ்ரீ காண்டீராவா ஸ்டேடியத்தில் நவம்பர் 29 அன்று நடைபெறவுள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் எஃப்சி புனே சிட்டி அணி, பெங்களூரு எஃப்.சி அணிக்கு எதிராக களம் இறங்குகிறது.
இந்த போட்டியில் தங்கள் அணியினருக்கு ஒரு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என தான் நம்புவதாக புனே அணியின் இடைக்கால பயிற்சியாளர் பிரதியூம் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரு எஃப்சி அணி தொடங்கப்பட்டபோது அதன் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக ரெட்டி பணியாற்றினார். அவரும் அதில் ஒரு முக்கிய பங்கு வகித்தார். பெங்களூரு அணி இந்த மூன்று ஆண்டுகளில் பல வெற்றிகளை ருசித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு ரெட்டி புனே அணியில் சேர்ந்தார்.
பெங்களூரு அணியில் இருந்து அதன் வெற்றியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரெட்டி இந்த சீசனில் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ராட் அணிக்கு எதிராக களம் இறங்குகிறார். பெங்களூரு அணியின் வெற்றியைத் தடுக்க நினைக்கிறார்.
இது வரை ஒன்பது ஆட்டங்களில் விளையாடிய புனே அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இனியாவது வெற்றி அட்டவணையில் மேலும் கீழ் இறங்காமல் இருக்க அந்த அணி நினைக்கிறது.
ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கு எதிராக விளையாடியபோது 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற புனே அணி, அடுத்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால் அந்த அணி தற்போது நம்பிக்கை இழந்துள்ளது.
மோசமான நிலையில் உள்ள புனே அணி பெங்களூரு எஃப்சி அணிக்கு எதிராக விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது புனே அணிக்கு மிகப் பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது எங்கள் அணி 90 நிமிடங்கள் நன்றாக விளையாடுவதற்கான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி தான் இந்த சீசனின் தங்கள் விதியை நிர்ணயிக்க உள்ளதாக நினைக்கிறார் இடைக்கால பயிற்சியாளர் ரெட்டி.
இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் நாங்கள் தடுப்பாட்டத்தை கையாள முயற்சிக்கிறோம். தற்போது தடுத்தாடும் முறை மற்றும் எதிர்த்து ஆடும் முறை என்று இரண்டையும் சமமாக பயன்படுத்த நினைக்கிறோம் என்கிறார் ரெட்டி.
பெங்களூரு அணியின் சுனில் ஷட்டரி எங்கள் அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பார் என்றாலும் காயம் காரணமாக மிக்கு இந்த போட்டியில் இல்லாதிருப்பது எங்கள் அணிக்கு சாதகம் என்கிறார் ரெட்டி. ஆனால் சுனில் ஷட்டரி புனே அணிக்கு எதிராக 6 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக்கு நாளை விளையாடாததால் தங்களது ஆட்டத்தின் ஸ்டைலை மாற்றப் போவதாக கூறுகிறார் பெங்களூரு பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரட்.
புனே அணியினர் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார்கள். டெல்லி அணியைப் போல மூன்று புள்ளிகள் பெற வேண்டும் என முயற்சிப்பார்கள். இது எங்களுக்கு ஒரு சோதனையான ஆட்டம் என்பதால் சற்று கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும் என்கிறார் கார்லஸ் குவாட்ரட்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இடைநீக்கம் செய்யப்பட்ட வீரர் டிமோஸ் டெல்கோடா தற்போது மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது பெங்களூரு அணிக்கு கூடுதல் பலம். அவர் மிட் ஃபில்டில் சிறப்பாக விளையடுவார். தற்போது அட்டவணையில் உள்ளதைக் காட்டிலும் 5 புள்ளிகள் கூடுதலாக எடுக்க வேண்டும் என்கிறார் கார்லஸ் குவாட்ரட்.
(Photos Courtesy - ISL)