பெங்களூரு : பெங்களூருவில் நவம்பர் 26 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் டெல்லி டைனமோஸ் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 40 ஆவது கால்பந்து போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீரவா ஸ்டேடியத்தில் பெங்களூரு எஃப்சி அணிக்கும், டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
தொடக்கத்தில் ஆட்டம் மந்தமாக இருந்தாலும் 10 நிமிடங்களுக்குப் பிறகு இரு அணிகளும், தடுப்பாட்டத்தில் இறங்கினர். ஆட்டத்தின் 26 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ஆட்ரியா கார்மோனாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் பல முறை கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தும் அது நழுவிப் போனது.
இதையடுத்து கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அந்த ஒரு நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலை பெற்றிருந்தது.
இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 49 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்பட்டது. ரினோ ஆண்டன் வெளியேற எரிக் களம் இறங்கினார்.
இதே போல் 55 மற்றும் 60 ஆவது நிமிடங்களில் பெங்களூரு, டெல்லி அணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் 74 மற்றும் 79 ஆவது நிமிடங்களிலும் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இடைவேளை முடிந்து 40 நிமிடங்கள் ஆகியும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதனால் எப்படியாவது ஒரு கோல் அடித்துவிட வேண்டும் என்று இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஆட்டத்தின் 87 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் உதாந்தா சிங் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இதையடுத்து டெல்லி அணியின் மார்த்திக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. தொடர்நது கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த மூன்று நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து டெல்லி டைனமோஸ் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
(Photos Courtesy - ISL)