புனே : புனேவில் டிசம்பர் 11 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் புனே சிட்டி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 54 ஆவது கால்பந்து போட்டி புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் ஸ்டேடியத்தில் எஃப்சி புனே சிட்டி அணிக்கும் எஃப்சி கோவா அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற எஃப்சி கோவா அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டம் தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. கோவா அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் அகமது ஜோஸ்வாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் புனே அணியின் இயான் ஹியுமுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து 2 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த 2 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் 0 - 0 என்ற நிலையில் கோல் எதுவும் அடிக்காமல் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 74 ஆவது நிமிடத்தில் மார்சிலோ பெரேரா அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
இரண்டாம் பாதியின் கடைசி நிமிடமான 90 ஆவது நிமிடத்தில் புனே அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது புனே அணியின் மார்கோ ஒரு கோல் அடித்து அசத்தினார்.
கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து புனே சிட்டி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
(Photos Courtesy - ISL)