புனே : புனே ஸ்ரீ ஷிவ் சத்ரபதி ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நவம்பர் 26 அன்று நடைபெறவுள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியை புத்துணர்வுடன் எதிர்கொள்ள புனே சிட்டி எஃப்சி அணி தயாராகி வருகிறது.
தற்போதைய வெற்றி அட்டவணையில் முதல் நான்கு இடத்தில் உள்ள நார்த் ஈஸ்ட் அணியை, எட்டு ஆட்டங்களில் விளையாடி ஐந்து புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள புனே அணி எதிர்த்து விளையாடி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
ஒரு இடைவேளைக்குப் பிறகு கடந்த வாரம் ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்த்து விளையாடிய புனே அணி முதன்முறையாக தனது வெற்றியைப் பதிவு செய்தது. காயம் காரணமாக நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து லேன் ஹீயும் நாளை களமிறங்க உள்ளதால் அந்த அணி உற்சாகத்தில் உள்ளது.
இதே போல் ஆஷிக் குருனியன் நல்ல ஃபார்மில் உள்ளதால் அவரது திறமையும், வேகமும் எதிர் அணியினரை கலங்கச் செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ள புனே அணியின் இடைக்கால பயிற்சியாளர் பிரதீயூம் ரெட்டி, பிரேசில் வீரர் மார்சின்ஹோ மீண்டும் தனது திறமையை நிரூபிப்பார் என கூறினார். அதே நேரத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர்களின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது எனவும் ரெட்டி கூறினார்.
இடைவேளைக்கு முன்னதாக நடந்த இரண்டு போட்டிகளிலும் பழைய முறையை கையாண்டதால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. எனவே நாளை புதிய முறையைக் கடைப் பிடித்து மூன்று புள்ளிகளை எடுத்த வெற்றி பெற வேண்டும் என ரெட்டி தெரிவித்தார்.
வெற்றி அட்டவணையைப் பொறுத்த வரை நாங்கள் கேரளா அணியை அடுத்து இருக்கிறோம். அவர்கள் ஏழு புள்ளிகளை பெற்றுள்ளனர். நாங்கள் அதை முறியடிக்க வேண்டும் என நினைக்கிறோம் என்றார் ரெட்டி.
நார்த் ஈஸ்ட் அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் இரண்டு புள்ளிகளைப் பெற்று கேரளா அணியிடம் திரில் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் பெற்ற வெற்றி நார்த் ஈஸ்ட் அணிக்கு ஒரு உத்வேகத்தைத் தந்துள்ளதால், கடந்த 5 சீசன்களில் முதன் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடுவோம் என்ற நம்பிக்கையை அவர்கள் பெற்றுள்ளனர்.
நார்த் ஈஸ்ட் அணி 7 ஆட்டங்களில் எட்டு கோல்களை அடித்துள்ளது. இதுவும் அவர்களுக்கு ஒரு புத்துணர்வைத் தந்துள்ளது. கோல்டன் பூட் வெற்றியாளர்களான ஃபெரான் கொராமினஸ் (8) மற்றும் சுனில் ஷட்டரி (5) ஆகியோருக்கு இணையாக பர்த்தலோமி ஓக்வெகே ஏழு கோல்களை அடித்துள்ளார்.
புனே அணி எங்களுக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுக்கும். நாங்கள் எங்கள் நிலையைத் தக்க வைத்துக்கொள்ள நினைக்கும் அதே நேரத்தில் புனே அணி வெற்றி பெற வேண்டும் என நினைப்பதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார் நார்த் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் எல்கோ ஸ்கட்டோரி.
புனே அணிக்கென்று தனித் திறமை உள்ளது. அதே போல் புனே அணியில் பல திறமையான வீரர்களும் உள்ளனர். அவர்களது குறைகளைக் கண்டறிந்து அதற்கேற்றார் போல் எங்கள் அணி விளையாடும் என்கிறார் ஸ்கட்டோரி.
இரு அணிகளுமே வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால் முதல் நான்கு இடங்களுக்குள் தங்களை உறுதிப்படுத்த இரு அணிகளுமே கடுமையாக விளையாடும் என எதிர்பார்க்கலாம்.
(Photos Courtesy - ISL)