சென்னை : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நடப்பு சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி நடப்பு சீசனில் அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துவிட்டது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஐ.எஸ்.எல் 5வது சீசன் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது. இந்த சீசனில் நடப்பு சாம்பியன் சென்னையின் எஃப்சி அணி மிகவும் மோசமாக ஆடிவருகிறது. இதுவரை ஆடியுள்ள 11 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னையின் எஃப்சி அணி, 2 போட்டிகளை டிரா செய்தது. எஞ்சிய 8 போட்டிகளில் தோல்வியை தழுவி, 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
கடந்த சீசனில் இறுதி போட்டியில் பெங்களூரு எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி கோப்பையை வென்ற சென்னையின் எஃப்சி அணி, இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது. வெறும் 5 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ள சென்னையின் எஃப்சி அணி, எஞ்சிய 7 போட்டிகளிலும் வென்றால் கூட அதிகபட்சம் 26 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். ஆனால் குறைந்தது 30 புள்ளிகளை பெற்ற அணிகள் தான் கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
அந்த வகையில் சென்னையின் எஃப்சி அணி, இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது சந்தேகம்தான். எனினும் கடந்த கால புள்ளி பட்டியலை இந்த சீசனுக்கும் அப்படியே பொறுத்தி பார்க்க முடியாது. அந்த வகையில் சென்னையின் எஃப்சி அணி, எஞ்சிய போட்டிகளில் மிரட்டலாக ஆடி புள்ளிகளை குவிக்கும் பட்சத்தில், தற்போது டாப்பில் இருக்கும் அணிகளின் தொடர் தோல்விகளும் சென்னையின் எஃப்சி அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தீர்மானிக்கும். ஆனால் இது நடப்பதற்கான சாத்தியம் மிகமிக குறைவுதான்.
நடப்பு சாம்பியனான சென்னை அணியின் தொடர் தோல்விகளும் மோசமான ஆட்டமும் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களை மட்டுமல்லாது அந்த அணியின் பயிற்சியாளர் ஜான் கிரெகோரியும் அதிருப்தியில் உள்ளார்.
சென்னை அணியின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரெகோரி, நான் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளேன். இந்த சூழலில் நெருக்கடியாக உணர்வதை காட்டிலும் மிகவும் ஏமாற்றமடைந்திருக்கிறேன் என்றுதான் கூறவேண்டும் என கிரெகோரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த சீசனில் சென்னை அணி இதுவரை ஆடியுள்ள 11 போட்டிகளில் வெறும் 12 கோல்களை மட்டுமே அடித்துள்ள நிலையில், சென்னை அணிக்கு எதிராக 21 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. நடப்பு சாம்பியன் சென்னை அணி, இவ்வளவு மோசமாக ஆடியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சீசனில் சென்னை அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு தகர்ந்துவிட்ட நிலையில், அடுத்து வர உள்ள ஏ.எஃப்.சி கோப்பை தொடர்தான் அதன் நம்பிக்கையாக உள்ளது. அதில் வெல்வதன் மூலம் தற்போது ஐ.எஸ்.எல் தொடரில் வாங்கிய அடியிலிருந்து மீண்டு சென்னை அணி நம்பிக்கையையும் உத்வேகத்தையும் பெறும் முனைப்பில் உள்ளது.
ஏஎஃப்சி கோப்பை தொடர் அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகிறது. இடையில் குளிர்கால விடுமுறை வருகிறது. மேலும் வீரர்களை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் ஜனவரியில் வர உள்ளது. இதை பயன்படுத்தி பயிற்சியாளர் கிரெகோரிக்கு குறைகளை சரிசெய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீசனில் இன்னும் இன்னும் விளையாட நிறைய வாய்ப்புகள் உள்ளன
(Photos Courtesy - ISL)