மும்பை : மும்பையில் டிசம்பர் 16 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி அணி 6 - 1 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 59 ஆவது கால்பந்து போட்டி மும்பையில் உள்ள அரினா அரங்கில் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற கேரளா எஃப்சி அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டம் தொடங்கிய 12 ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் மொடுகு சோகு அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து 15 ஆவது நிமிடத்தில் மொடுகு சோகு மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் கேரளா அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி அதை நழுவவிட்டது. ஆனால் 27 ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் சிமின்லென் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
பின்னர் ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொடுகு சோகு 3 ஆவது கோலை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 35 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஜாகிருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 41 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சாகல் அப்துலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.
பின்னர் அவர்களுக்கு கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த 2 நிமிடங்களில் இரண்டு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதியில் மும்பை சிட்டி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ரஃபேல் பாஸ்டஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்து அணியின் கோல் எண்ணிக்கையை 4 ஆக உயர்த்தினார்.
ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் ஆட்டத்தின் 89 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மேட்டியஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இதைத் தொடர்ந்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது 90 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மொடுகு சோகு தனது 4 ஆவது கோலை அடித்து அணியின் கோல் கணக்கை 6 ஆக உயர்த்தினார்.
இதையடுத்து மும்பை சிட்டி அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 6 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
(Photos Courtesy - ISL)