கவுஹாத்தி : ஹீரோ ஐஎஸ்எல் தொடரில் கவுஹாத்தி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் நார்த் ஈஸ்ட் மற்றும் ஏடிகே அணிகள் மோத உள்ளன.
கடந்த 4 போட்டிகளில் இரு அணிகளுமே தோல்வியே அடையாமல் உள்ளன. நார்த் ஈஸ்ட் அணி கடைசி இரு போட்டிகளில் ஜாம்ஷெட்பூர் மற்றும் பெங்களூரு அணிகளிடம் டிரா செய்துள்ளது.
ஏடிகே அணி தனது முந்தைய போட்டியில் சென்னையின் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.
நார்த் ஈஸ்ட் அணி 10 போட்டிகளில் 19 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ஏடிகே அணி 10 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.
2015 சீசனில் 20 புள்ளிகள் எடுத்ததுதான் ஐஎஸ்எல்லில் நார்த் ஈஸ்ட்டின் சிறப்பான செயல்பாடாக இருந்துவருகிறது. அடுத்து ஏடிகே-வை வெல்லும் பட்சத்தில் இதுவே நார்த் ஈஸ்ட்டின் மிகச்சிறந்த சீசனாக இருக்கும்.
ஆனால் தொடர்ந்து 8 நாட்களில் 3 போட்டிகளில் ஆடுவது நார்த் ஈஸ்ட் வீரர்களுக்கு களைப்பான ஒன்றாகவே இருக்கும். இதைத்தான் தனது பெருங்கவலையாக குறிப்பிடுகிறார் பயிற்சியாளர் ஷோட்டரி.
முதல் 4 இடங்களுக்குள் வருவதுதான் தனது முதல் இலக்கு எனக் குறிப்பிடும் பயிற்சியாளர் ஆனால் அது கடினமான ஒன்று என்றும் சொல்கிறார்.
ஏடிகே-வின் தாக்குதல் ஆட்டம் முற்றிலும் மாறுபட்டது என்கிறார் ஷோட்டரி.எனவே இது எங்களுக்கு சற்று கடினமானதாகவே இருக்கும் என்கிறார் பயிற்சியாளர் ஷோட்டரி. இருந்தாலும் ஏடிகே-வுடன் ஏற்கனவே 2 போட்டிகளில் ஆடிய அனுபவம் தங்களுக்கு கை கொடுக்கும் என நம்புகிறார் பயிற்சியாளர்.
உருகுவே வீரர் ஃபெடரிகோ கேலகோ-வின் ஆட்டம் பயிற்சியாளருக்கு உவப்பு தருவதாக உள்ளது. இவர் இதுவரை 3 கோல்களை அடித்துள்ளதுடன் 5 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.
இத்தொடரில் சிறந்த நடுக்கள வீரர் ஆகவும் இவர் திகழ்கிறார். எனவே இவரை கட்டுப்படுத்துவது எதிரணி பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பலுக்கு கடினமான ஒன்றாகவே இருக்கும்.
ஆனால் மேனுவல் லாசரோட் என்ற பதிலடியை தன் வசம் வைத்துள்ளது ஏடிகே. இவரை பயிற்சியாளர் காப்பல் மிகவும் நம்பியுள்ளார். இந்த சீசனில் ஏடிகே-வின் ஆட்டம் உறுதியாக இல்லாமல் ஊசலாட்டம் மிகுந்ததாக உள்ளது.
'சில நேரங்களில் அணியை புரிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்படும். சரியான விகிதத்தில் அணியை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்' என்கிறார் காப்பல்.
'கடந்த முறை நார்த் ஈஸ்ட்டிடம் தோற்றதற்கு பின்னர் இரு அணிகளுமே நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. சிறந்த பயிற்சியாளரால் நார்த் ஈஸ்ட் தன்னம்பிக்கை மிகுந்த அணி ஆகியுள்ளது' என்கிறார் காப்பல்.
இரு அணிகளுக்கு இடையிலான போட்டி கடினமானதாக இருந்தாலும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்கிறார் காப்பல். இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு இத்தொடரில் சாதகமான சூழலை பெறும்.
(Photos Courtesy - ISL)