மும்பை : 14 வயது சிறுவனான அனிகேத் ஜாதவ் முதல் ஐஎஸ்எல் சீசனில் புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரீதம் கோத்தல், லென்னி ரோட்ரிகஸ் போன்ற வீரர்களுக்கு பந்து எடுத்து தந்துகொண்டிருந்தார்.
ஆறு ஆண்டுகளுக்கு பின் அதே அனிகேத் ஜாம்ஷெட்பூர் அணியில் இடம்பெற்று ஒடிசா எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கினார். மராட்டியத்தின் கோலாப்பூரை சேர்ந்த இந்த இளைஞர் 2017ல் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு தேர்வாகியிருந்தார்.
"எனது முதல் ஐஎஸ்எல் சீசனில் ஜாம்ஷெட்பூருக்காக களம் இறங்கப் போகும் முன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன் என்பதே உண்மை. இந்த சீசனுக்காக காத்திருந்தேன்" என்கிறார் 19 வயது இளைஞர் அனிகேத். யு 17 உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஐ லீக்கில் இந்தியன் ஏரோஸ் அணிக்காக ஆடி திறமையை வளர்த்துக் கொண்டிருந்தார் இவர்.
"சிறு வயதில் சுப்ரதோ பால், ஸ்டீவன் டயஸ் (இப்போது ஜாம்ஷெட்பூர் உதவி பயிற்சியாளர்) ஆகியோர் ஆட்டத்தால் கவரப்பட்டு அவர்கள் போலவே ஆடினேன். முதல் இரு ஐஎஸ்எல் சீசனில் புனேவில் நடந்த ஆட்டங்களில் பந்து எடுத்து தரும் பணியை செய்தேன். அப்போது 5-6 மூத்த வீரர்களிடம் பேசியதில் இருந்து ஜாம்ஷெட்பூர் அணியில் உள்ள வசதிகள் மற்றும் சூழல் தெரியவந்தது. இதனால் அந்த அணியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டேன்" என ஜாம்ஷெட்பூர் எஃப்சி க்கு தேர்வான விதம் குறித்து விளக்கினார் அனிகேத்.
இங்கிலீஷ் கிளப்பான பிளாக்பர்ன் ரோவர்ஸ்- ல் 3 மாதம் பயிற்சி எடுத்துள்ளார் அனிகேத். அதில் கிடைத்த அனுபவங்களை வைத்து வரும் சீசனில் ஆட முடிவு செய்துள்ளார் அனிகேத்.
"அது எனக்கு தேவையான படிப்பினைகளை தந்தது. தொழிற் முறை வீரனாக நான் பலவற்றை அங்கு கற்றுக்கொண்டேன்" என்கிறார் அனிகேத். "பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணியில் வீரர்கள், பயிற்சியாளர்கள் திறமையில் ஊறிக்கிடந்தனர். அதில் கற்றவற்றை நிச்சயம் ஐஎஸ்எல்லில் பயன்படுத்துவேன்" என்கிறார் அனிகேத்.
ஆனால் இவர் முந்தைய சீசனில் ஜாம்ஷெட்பூர் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் ஏரோஸ் அணிக்காக மீண்டும் ஆடினார்.
ISL 2019-20 : ஒடிசா அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி அபார வெற்றி!!
அணி வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இடம் பெறுவது எவ்வளவு கடினம் என உணர்ந்துள்ள அனிகேத் அதற்கேற்ப திறமையை காட்ட விரும்புகிறார்.
ஐஎஸ்எல்லில் களத்தில் ஆடும் த்ரில்லை பெற்றுவிட்ட அனிகேத் மேலும் பலவற்றை சந்திக்க உள்ளார்.