மும்பை : எஃப்சி புனே சிட்டி அணியிலிருந்து பெங்களூரு எஃப்சி அணிக்கு மாறியது மூலம் மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்துவிட்டார் ஆஷிக் குருனியன்.
தேசிய அணியின் லேட்டஸ்ட் நட்சத்திரமாக உள்ள திறமை நிறைந்த குருனியன் அடுத்து ஐஎஸ்எல் சாம்பியன்களுடன் இணைந்து தன் ஆட்டத்தை அடுத்த நிலைக்கு உயர்த்த உள்ளார். ஐஎஸ்எல் சீசன் தொடங்கும் முன் பேசினார் ஆஷிக் குருனியன்.
இந்திய கால்பந்து ரசிகர்களின் லேட்டஸ்ட் உள்ளங்கவர் நாயகனாக விளங்குகிறீர்கள். தேசிய அணியில் இருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தேசிய அணியில் இணைந்த பின் அற்புதமாக உணர்கிறேன். நாட்டுக்காக ஆடுவது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பெரிய விஷயம்.
ஒவ்வொரு ஆட்டத்துக்கும் அணியில் மாற்றம் செய்யப்படும் நிலையில் என்னை விளையாடும் அணியில் தக்க வைத்துக் கொள்ள முனைப்பாக உள்ளேன்.
பெங்களூரு அணிக்கு நீங்கள் மாறியதும் அதிகம் பேசப்படுகிறதே?
பெங்களூரு எஃப்சி க்கு மாறியது மிகப்பெரிய திருப்பம். ஏனென்றால் அந்த அணியுடன் 4 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். ஒரு அணியில் நீண்ட காலம் நீடிப்பது என் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
நிர்வாகத்துடனும் சக வீரர்களுடனும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். பெங்களூரு போன்ற தொழில்ரீதியான அணியில் உள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி.
கலைக்கப்பட்ட புனே எஃப்சி அணியில் இருந்து வெளியேறியுள்ளீர்கள். காரணம் என்ன?
என் கால்பந்து வாழ்க்கையில் எஃப்சி புனே சிட்டி முக்கியமான ஒன்று. புனேவுக்கு 5 ஆண்டுக்கு முன் வந்தேன். புனே அகாடமி யில் 2 ஆண்டு பயின்றேன். பின் எஃப்சி புனே சிட்டி அணியில் சேர்ந்தேன். அடுத்து தேசிய அணியிலும் இடம் பெற்றேன். இதனால் புனே என் வாழ்வில் முக்கிய இடம் பெறுகிறது. நான் சிறப்பான தொடக்கம் பெற காரணமான புனே அணி நிர்வாகம், பணியாளர்கள், ரசிகர்களுக்கு நன்றி.
பெங்களூரு எஃப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் இடையிலான போட்டி சூழலுக்கும் உங்களுக்கும் தொடர்புள்ளதா?
கேரளா எனது தாய் மண். அந்த அணிக்காக ஆடும் காலம் வருமா என தெரியாது. வேறு யாருக்கும் கூட அது தெரியாது. பெங்களூரு அணியுடன் குறைந்தது நான்கு ஆண்டுகள் இருப்பேன். அதில்தான் என் முழு கவனமும் இருக்கும். இது கால்பந்து... இதில் எப்போது என்ன திருப்பம் வரும் என யாருக்கும் தெரியாது. ஆனால் ஐஎஸ்எல்லில் கேரளாவிலிருந்து ஒரு அணி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. ஏனெனில் இதன் மூலம் எனது தாய் மண்ணில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கேரளா மற்றும் பெங்களூரு ரசிகர்கள் தரும் உற்சாகம் ஆட்டத்தில் வித்தியாசங்களை தந்துகொண்டே இருக்கும்.
இந்தியாவில் அதிகம் பேசப்படும் இளம் வீரர்களில் ஒருவராக இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அதிகம் பேசப்படும்போது அதுவே ஒரு ஊக்கமாக அமையும். இளம் வீரர்கள் கடுமையாக போராடி அணியில் நுழைய முயன்று கொண்டுள்ளனர். பெங்களூரு எஃப்சி ரிசர்வ் அணியினர் அதிக திறன் கொண்டுள்ளனர். இந்தியாவில் மேலும் பல இளம் வீரர்கள் உருவாகிக் கொண்டுள்ளனர். அதிகம் பேசப்படுவது எந்த அளவு ஊக்கம் தரும் என்பதை ஒரு இளம் வீரராக நான் நன்கு அறிவேன். மூத்த வீரர்களும் பயிற்சியாளர்களும் என்னுடன் பேச விளையும்போது இதை உணர்கிறேன்.