கொல்கத்தா : பெங்களூரு எஃப்சி அணிக்கு எதிரான ஐஎஸ்எல் போட்டியில் வெற்றிபெற்ற ஏடிகே அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நடைபெற்ற 45வது லீக் போட்டியில் ஏடிகே மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் மோதின. கொல்கத்தா யுவபாரதி கிரிரங்கன் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு 2வது இடத்திலும் கொல்கத்தா 3வது இடத்திலும் இருந்தன.
இப்போட்டியில் வென்றால் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் நிலையில் பெங்களூரு இருந்தது. அதிக கோல் போட்டு வென்றால் ஏடிகேவுக்கும் முதலிட வாய்ப்பு காத்திருந்தது. இந்நிலையில் போட்டி தொடங்கியது.
தொடக்கம் முதலே பெரும்பாலான நேரம் பந்தை பெங்களூரு அணி தன் வசம் வைத்திருந்தது.
25வது நிமிடத்தில் ஏடிகே தடுப்பாட்டக்காரர் கோட்டல் விதிமீறிய ஆட்டத்துக்காக மஞ்சள் அட்டை பெற்றார். முதல் பாதியில் இரு அணிகளும் முழு வீச்சில் ஆடாததால் ஆட்டம் சற்று விறுவிறுப்பு குறைந்தே காணப்பட்டது. இரு அணிகளுமே சில கோல் வாய்ப்புகளை வீணாக்கின. முதல் பாதி ஆட்ட முடிவில் ஆட்டம் 0 - 0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி தொடங்கியவுடன் ஏடிகே அணி டாப் கியருக்கு மாறி அதிரடியாக ஆடியது. இதன் பலனாக 47வது நிமிடத்தில் ஏடிகே வீரர் ராணே கடத்தி தந்த பந்தை டேவிட் வில்லியம்ஸ் லாவகமாக கோல் ஆக்கினார். இதனால் ஏடிகே அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
வீரர்களின் காயத்திற்கான சிகிச்சை குறித்த சர்ச்சை - ராகுல் டிராவிட், சவுரங் கங்குலி ஆலோசிக்க திட்டம்
இந்நிலையில் திருப்பத்தை கொண்டுவரும் திட்டமாக பெக்குவுக்கு மாற்றாக குருனியனை களமிறக்கியது பெங்களூரு. 53வது நிமிடத்தில் ஏடிகே வீரர் மாண்டி மஞ்சள் அட்டை காட்டப்பட்டு எச்சரிக்கப்பட்டார்.
பெங்களூருவின் குருனியற், ஏடிகே வின் அகஸ் ஆகியோரும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டனர். 81 வது நிமிடத்தில் ஏடிகே ஒரு கோல் அடித்தாலும் அது ஆஃப் சைடு ஆக அறிவிக்கப்பட்டது. இறுதி நிமிடங்களில் கோல் அடிக்க இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆடின. ஆட்ட நேர முடிவில் ஏடிகே அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Photos Courtesy : ISL Media