கோவா : இந்தியன் சூப்பர் லீக்கின் ஆறாவது சீசனுடைய இறுதி ஆட்டம் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஏடிகே எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகளுக்கிடையே சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
இதில் சென்னையின் எஃப்சியை, ஏடிகே எஃப்சி 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றியது.
முன்னதாக பரபரப்பான இந்த ஐஎஸ்எல் இறுதிப் போட்டியில் ஏற்கனவே இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள இரு அணிகளும், தங்களுடைய மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கி இருந்தன.
அரை இறுதி போட்டிகளில் இரண்டு அணிகளுமே தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. எஃப்சி கோவாவை சென்னையின் எஃப்சி தெறிக்க விட்ட நிலையில், பெங்களூரு எஃப்சியை சிதற விட்டது ஏடிகே எஃப்சி.
சென்னையின் எஃப்சியும், ஏடிகே எஃப்சியும் ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டியில் சந்தித்தது இதுவே முதல் முறையாகும். இது வரை இரு அணிகளுமே தாங்கள் பங்கு கொண்ட இறுதி ஆட்டங்களில் தோற்றதில்லை என்ற பெயரை பெற்றிருந்தன. ஆனால், அந்த பெயரை, சென்னையின் எஃப்சி இறுதிப் போட்டியில் இழந்தது.
ஏடிகே எஃப்சி, இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. தொடக்கத்தில் தடுமாறிய சென்னையின் எஃப்சி, ஓவன் கோய்லி கோச்சாக பொறுப்பேற்றதிலிருந்து அதிர்ஷ்ட காற்றை தன் பக்கம் திருப்பியது.
எனவே, கோய்லி எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டுமென்பதில் குறியாக இருந்தார். ஏடிகே அணியின் கோச் ஆன்டானியோ ஹபாஸும் வெற்றியை சுவைத்து கோப்பையை கொல்கத்தா எடுத்து செல்ல முனைப்பாக இருந்தார்.
இரு அணிகளுமே வலுவாக இருந்ததால், இறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கும், பரப்பரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது.
டாஸ் வென்ற சென்னையின் எஃப்சி அணி வலது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. 5வது நிமிடத்தில் அந்த அணியின் ஜெர்மனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 10வது நிமிடத்தில் ஏடிகே எஃப்சி அணியின் ஜாவி, ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை தொடங்கினார்.
இருபத்தி இரண்டாவது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. 40வது நிமிடத்தில் ஏடிகே எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. 45வது நிமிடத்தில் 3 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஏடிகே எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையே ஏடிகே எஃப்சி அணியின் எடு கார்சியா, 48வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 51வது நிமிடத்திலும், 59வது நிமிடத்திலும், அந்த அணியின் மண்டி சோசாவுக்கும், ரெஜின் மைக்கேலுக்கும் முறையே மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஏடிகே எஃப்சி தனது அணியில் 66வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. சென்னையின் எஃப்சி கோல் அடிக்குமா அடிக்காதா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அந்த அணியின் வல்க்ஸிஸ் 69வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இன்னும் கோல்களை எதிர்பார்த்து, சென்னையின் எஃப்சி, 76வது நிமிடத்தில் தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. அதே போல், ஏடிகே எஃப்சியும் தனது அணியில் 84வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது.
88வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் எலி சபியாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 90வது நிமிடத்தில் கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஏடிகே எஃப்சி அணியின் ஜாவி ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் ஏடிகே எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சென்னையின் எஃப்சி அணி இரண்டு முறை சாம்பியன் என்றாலும், மூன்றாவது முறை கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. ஏடிகே அணி தன் மூன்றாவது ஐஎஸ்எல் கோப்பையை வென்றது.