கோவா : இந்தியன் சூப்பர் லீக்கின் ஆறாவது சீசனுடைய இறுதி ஆட்டம் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஏடிகே எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகளுக்கிடையே சனியன்று நடைபெறுகிறது.
ஏற்கனவே இரு முறை கோப்பையை வென்றுள்ள இரு அணிகளும், தங்களுடைய மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கி கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அரை இறுதி போட்டிகளில் இரண்டு அணிகளுமே தங்களது திறமையை சிறப்பாக காண்பித்தன. எஃப்சி கோவாவை சென்னையின் எஃப்சி தெறிக்க விட்ட நிலையில், பெங்களூரு எஃப்சியை சிதற விட்டது ஏடிகே எஃப்சி.
சென்னையின் எஃப்சியும், ஏடிகே எஃப்சியும் இறுதி போட்டியில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இது வரை இரு அணிகளுமே தாங்கள் பங்கு கொண்ட இறுதி ஆட்டங்களில் தோற்றதில்லை என்ற பெயரை பெற்றுள்ளன.
ஏடிகே எஃப்சி, இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. தொடக்கத்தில் தடுமாறிய சென்னையின் எஃப்சி, ஓவன் கோய்லி கோச்சாக பொறுப்பேற்றதிலிருந்து அதிர்ஷ்ட காற்றை தன் பக்கம் திருப்பியது.
எனவே, கோய்லி எப்படியாவது நாளை கோப்பையை வென்று விடவேண்டுமென்பதில் குறியாக இருக்கிறார். 14 கோல்கள் எடுத்துள்ள நெரிஜுஸ் வல்க்ஸிஸும், மிகவும் லாவகமாக விளையாடும் ரஃபேல் கிரிவெல்லாரோவும் அணிக்கு மிகவும் வலு சேர்க்கிறார்கள்.
"எனக்கு ஏடிகே எஃப்சி மீது அளவு கடந்த மரியாதை உள்ளது. மிகவும் திறமையான வீரர்களை கொண்ட அணி அது. எங்களை பொறுத்தவரை, நாங்கள் எப்போதும் போல் எங்கள் ஸ்டைலிலேயெ விளையாடுவோம். ஏனென்றால், நாங்கள் அதைக் கொண்டு தான் நிறைய வெற்றிகளை பெற்றுள்ளோம், என்கிறார் கோய்லி.
மேலும் அவர், "எங்களுக்கு அழுத்தம் இருப்பது உண்மை தான். ஆனால், அதே சமயம், நாங்கள் எத்தகைய சவால்களை எதிர்கொள்ளவும் தயராக உள்ளோம்," என்கிறார்.
ஏடிகே எஃப்சி அணிக்கு ராய் கிருஷ்ணாவும், டேவிட் வில்லியம்ஸும் வலிமை சேர்க்கின்றனர். இந்த சீசனில் 15 கோல்களை அடித்துள்ள கிருஷ்ணாவும், திறம்பட விளையாடி வரும் வில்லியம்ஸ், எடு கார்சியா, பிரபிர் தாஸ் மற்றும் ஜாவியர் ஹெர்னான்டஸ் ஆகியோர் இறுதி போட்டியில் சென்னையின் எஃப்சிக்கு சவாலாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது.
"நாளைய மேட்சை நாங்கள் மிகவும் ஆவலாக எதிர்நோக்கியுள்ளோம். அதே சமயம், எதிரணியையும் மதிக்கிறோம். வெல்வதற்கு போதுமான நேரமும், திறமையும் எங்களுக்கு இருக்கிறது. வீரர்கள் அனைவரும் கூட்டாக முயற்சி செய்து கோப்பையை வெல்வோம்," என நம்பிக்கையுடன் கூறுகிறார் ஏடிகே அணியின் கோச் ஆன்டானியோ ஹபாஸ்.
இரு அணிகளுமே வலுவாக உள்ளதால்,சனியன்று ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும், பரப்பரப்புக்கும் பஞ்சம் இருக்காது. வெற்றி மகுடம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு நாளை இரவு விடை தெரியும்.
Photos Courtesy : ISL Media