கொல்கத்தா : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் நாளைய கால்பந்து போட்டியில் ஏடிகே எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 84வது நாள் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் அரங்கத்தில் ஞாயிறன்று நடக்கிறது.
இந்த சீசனில் இதுவரை 16 மேட்சுகள் ஆடி 33 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ள ஏடிகே எஃப்சி, 15 ஆட்டங்களில் 22 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ள சென்னையின் எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்திக்கிறது.
தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டி இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏடிகே எஃப்சி, முதலிடத்தில் உள்ள எஃப்சி கோவாவை முந்த மும்முரமாக உள்ளது. தன்னுடைய கடந்த ஆட்டத்தில் ஏடிகே எஃப்சி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஒடிஷா எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நாளையும் தன் வெற்றி பயணத்தை தொடர அது எந்த வாய்ப்பையும் நழுவ விடாது.
சொந்த மண்ணில் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ஆண்டானியோ ஹபாஸ் தலைமையிலான ஏடிகே, சென்னையின் எஃப்சியை தோற்கடிக்க மொத்த பலத்துடன் களமிறங்கும். காயம்பட்டதிற்கு பின் திரும்பிய டேவிட் வில்லியம்ஸ், நட்சத்திர ஆட்டக்காரராக உள்ள ராய் கிருஷ்ணா மற்றும் சிறப்பான பங்களிப்பை அளித்து கொண்டிருக்கும் எடு கார்சியா ஆகியோர் அணியில் உள்ளது ஹபாசுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. பிரபிர் தாஸ் மற்றும் மைக்கேல் சூசைராஜ் ஆகியோரும் ஏடிகே அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.
"நாங்கள் வலிமையாக இருந்தாலும், இது வரை நன்றாக விளையாடி இருந்தாலும், எங்கள் திறமையை நாங்கள் தொடர்ந்து காட்ட வேண்டும். நாளை சென்னையின் எஃப்சியை நாங்கள் வீழ்த்தியாக வேண்டும். இரு அணிகளுமே திறமையான அணிகள் என்பதால், நாளைய ஆட்டம் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். எப்போதும் எங்கள் குறிக்கோள் வெற்றி பெறுவது ஒன்று தான்," என்கிறார் ஹபாஸ்.
ஒவன் கொய்லி தலைமையிலான சென்னையின் அணி, நான்கு ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்று, சமீபத்தில் கேரளா பிளாஸ்டர்ஸை 6க்கு 3 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தாலும், தன்னுடைய கடந்த ஆட்டத்தை பெங்களூரு எஃப்சிக்கு எதிராக ஆடி ஒரு கோல் கூட அடிக்காமல் 0-0 என்ற கணக்கில் சமன் செய்தது.
எனவே, நாளைய மேட்சானது, கோல்களை அடித்து முன்னேறி தகுதி சுற்றுக்கு செல்வதற்கு சென்னையின் எஃப்சிக்கு கிடைத்துள்ள பெரிய வாய்ப்பாகும். கொய்லி தலைமையில், சென்னையின் எஃப்சி அணி, 8 ஆட்டங்களில் 22 கோல்களை அடித்துள்ளது. நெரிஜுஸ் வல்க்ஸிஸ், ரஃபேல் கிரிவெல்லாரோ, லல்லியான்ஜுயாலா சங்க்டே, எலி சபியா மற்றும் லூசியன் கோயன் ஆகிய வீரர்கள் சென்னையின் எஃப்சிக்கு வலு சேர்க்கிறார்கள். அனிருத் தாபாவும், ஜெர்மன்பிரீத் சிங் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆனால், தோய் சிங் இல்லாதது சிறிது வருத்தம் தான்.
கொய்லி கூறுகையில், "ஏடிகே எஃப்சிக்கு முதலிடத்தை பெற மூன்று புள்ளிகள் தேவை. எங்களுக்கு தகுதி சுற்றுக்குள் செல்ல மூன்று புள்ளிகள் தேவை. ஏடிகே ஒரு சிறந்த அணி என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே சமயம், நாங்களும் திறமையான அணி என்பதை அவர்கள் அறிவார்கள் என்றே நம்புகிறேன். ஏடிகே எஃப்சியை மதிக்கும் அதே வேளையில், அவர்களுடன் விளையாட எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால், எப்படிப்பட்ட அணியையும் எதிர்கொள்ளூம் திறமை எங்கள் வீரர்களிடம் இருக்கிறது," என்கிறார்.
வங்கத்தில் வரலாறு படைக்குமா சென்னையின் எஃப்சி?