கொல்கத்தா : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஏடிகே எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் சென்னையின் எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 84வது நாள் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் இதுவரை 16 மேட்சுகள் ஆடி 33 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருந்த ஏடிகே, 15 ஆட்டங்களில் 22 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் இருந்த சென்னையின் எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்தித்தது.
தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டி இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏடிகே எஃப்சி, முதலிடத்தில் உள்ள எஃப்சி கோவாவை முந்த மும்முரமாக இருந்தது. சொந்த மண்ணில் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ஆண்டானியோ ஹபாஸ் தலைமையிலான ஏடிகே, சென்னையின் எஃப்சியை தோற்கடிக்க மொத்த பலத்துடன் களமிறங்கியது.
ஒவன் கொய்லி தலைமையிலான சென்னையின் அணி, நான்கு ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்று, சமீபத்தில் கேரளா பிளாஸ்டர்ஸை 6க்கு 3 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தாலும், தன்னுடைய கடந்த ஆட்டத்தை பெங்களூரு எஃப்சிக்கு எதிராக ஆடி ஒரு கோல் கூட அடிக்காமல் 0-0 என்ற கணக்கில் சமன் செய்தது.
கோல்களை அடித்து முன்னேறி தகுதி சுற்றுக்கு செல்வதற்கு சென்னையின் எஃப்சிக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்பதால், அதை நழுவ விடக்கூடாது என்பதில் அந்த அணி குறியாக இருந்தது. டாஸ் வென்ற ஏடிகே அணி தனது ஆட்டத்தை தொடங்கியது. சரியாக 7வது நிமிடத்தில், சென்னையின் எஃப்சி அணியின் கிரிவெல்லாரோ ஒரு கோல் அடித்தார்.
இருபத்து ஐந்தாம் நிமிடத்தில் ஏடிகே எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. 35வது நிமிடத்தில் அந்த அணியின் மன்டி சோசாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 39வது நிமிடத்தில் சென்னையின் அணியின் ஷெம்ப்ரி ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் எண்ணைக்கை இரண்டாக உயர்த்தினார்.
உடனே சுதாரித்த ஏடிகே அணி, 40வது நிமிடத்தில் ஒரு கோலை (கிருஷ்ணா மூலம்) அடித்தது. 42வது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜாவிக்கும், 45வது நிமிடத்தில் சென்னையின் அணியின் தாபாவுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. பின்னர், முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இடைவேளைக்கு பிறகு இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது. 46வது நிமிடத்தில் ஏடிகே எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. நீண்ட நேரம் ஆகியும் கோல் எதுவும் விழாத நிலையில், 69வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சியும், 73வது நிமிடத்தில் ஏடிகே எஃப்சியும் தங்களது அணிகளில் மாற்றங்களை செய்தன. 88வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி, அணியில் இன்னொரு மாற்றத்தை செய்தது.
பின்னர் 4 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. ஏடிகே அணியின் வில்லியம்சுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னையின் எஃப்சி அணியில் வல்க்ஸிஸ் ஒரு அபார கோல் அடித்து தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், சென்னையின் எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Photos Courtesy : ISL Media