கொல்கத்தா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கோவா அணியும், ஏடிகே அணியும் மோதின. இதில் ஏடிகே அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வென்றது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 62வது ஆட்டத்தில் ஏடிகே அணியும், கோவா அணியும் கொல்கத்தாவில் விளையாடின. இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர்.
சம பலத்துடன் இரு அணி வீரர்களும் விளையாடியதால், யாரும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனாலும் இரு அணி வீரர்களும் எப்படியாவது கோல் அடிக்க பந்துகளை கடத்தி சென்றனர். பெரும்பாலான நேரங்களில் கோவா அணியினரிடம் பந்து இருந்தது.
இந்நிலையில், முதல் பாதி ஆட்டம் முடிந்தது. இதையடுத்து ஒரு நிமிடம் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அந்த கடைசி நிமிடத்தில் ஏடிகே அணிக்கு ஒரு அருமையான கார்னர் கிடைத்தது. இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள் என்று கொல்கத்தா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.
இந்த பரபரப்பான கடைசி நிமிடத்தில் கோவா கோல் நோக்கி ஏடிகே வீரர் பந்தை அடித்தார். இந்த பந்தை பாய்ந்து வந்து தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சி செய்தார் ஏடிகே வீரர். ஆனால் அந்த பந்து கோவா கோல் போஸ்ட் மேலே சென்றது. இதனால் ஏடிகே அணி வீரர்களும், ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். முதல் பாதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இதையடுத்து 2வது பாதி ஆட்டம் மீண்டும் தொடங்கியது. 47வது நிமிடத்தில் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் ஏடிகே வீரர் ராய் கிருஷ்ணாவுக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி பந்தை தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார்.
இந்த கோல் மூலம் ஏடிகே அணி முன்னணி பெற்றது. பதிலுக்கு கோல் அடிக்க கோவா அணி வீரர்கள் ஆவேசமாக விளையாடினர்.
54வது நிமிடத்தில் கோவா அணி வீரர் போமோசுக்கு மஞ்சள் கார்ட் காட்டப்பட்டது. கோல் அடிக்க கோவா அணி கடுமையாக போராடியது. ஆனால் அதற்கு வழி வகுக்காமல் தடுப்பாட்டத்தில் ஏடிகே அணி கவனம் செலுத்தி வந்தது. இந்நிலையில் 85வது நிமிடத்தில் ஏடிகே வீரர் ஹக்விசுக்கும், 87வது நிமிடத்தில் கோவா வீரர் ஜஹவுத்துக்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.
இந்நிலையில் 88வது நிமிடத்தில் ஏடிகே வீரர் கிருஷ்ணா கொடுத்த பந்தை கோலுக்குள் அடித்தார் சக வீரர் ரானே. ஆட்டத்தின் முடிவில் ஏடிகே அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி மகிழ்ந்தது.