பெங்களூரு : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெங்களூரு எஃப்சி மற்றும் ஏடிகே எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது. ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 88வது நாள் ஆட்டம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கன்டிராவா மைதானத்தில் சனியன்று நடக்கிறது.
இந்த சீசனில் இதுவரை 17 மேட்சுகள் ஆடி 29 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூரு எஃப்சி அணி, 17 ஆட்டங்களில் 33 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ள ஏடிகே எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்திக்கிறது.
இரு அணிகளுமே ஏற்கனவே தகுதி சுற்றுக்கு தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கிடையே வெறும் நான்கு புள்ளிகள் மற்றும் ஒரு இடமே வித்தியாசம் என்பதால், இந்தப் போட்டி சமமான பலமுள்ள அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள விறுவிறுப்பான ஆட்டம் என்னும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த சீசனில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பெங்களூரு எஃப்சி, தன்னுடைய கடந்த சில ஆட்டங்களில் ஏனோ சொதப்பியது. சென்னையின் எஃப்சிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தை பெங்களூரு எஃப்சி சமன் செய்த போதிலும், இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
கொச்சியில் நடைபெற்ற தன்னுடைய கடந்த ஆட்டத்தில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றது பெங்களூரு எஃப்சி. சொந்த மண்ணில் ஆட்டம் நடப்பதால், ஏடிகே எஃப்சியை வென்று விடலாம் என்னும் நம்பிக்கையில் இருக்கிறது. மேலும், வெற்றியை சுவைக்க அந்த அணியின் வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு எஃப்சி அணியின் கோச் கார்லெஸ் குட்ராட் கூறுகையில், "நாங்கள் தகுதி சுற்றில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். கடந்த மூன்று சீசன்களாக நாங்கள் தொடர்ந்து தகுதி சுற்றில் இடம் பெற்று வந்திருக்கிறோம். இருந்தாலும், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இந்த ஆட்டத்தையும் நாங்கள் நம்பிக்கையுடன் அணுகுவோம்," என்கிறார்.
இடைநீக்கத்துக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள சுனில் சேத்ரியும் ஜுவனானும் பெங்களூரு எஃப்சி அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். அதே சமயம், நான்கு மஞ்சள் அட்டைகளை பெற்ற ஆல்பர்ட் செர்ரான் அணியில் இல்லாமல் இருப்பது சற்றே வருத்தமளிக்கும் விஷயம்.
ஏடிகே எஃப்சியின் நிலைமையும் கிட்டத் தட்ட பெங்களூரு எஃப்சியைப் போலத் தான். அசுர பலத்துடன் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், தன்னுடைய கடந்த மேட்சில் சென்னையின் எஃப்சி அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. எனவே, தன் திறமையை நிரூபித்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள மும்முரமாக உள்ளது.
ஆண்டானியோ ஹபாஸ் தலைமையிலான ஏடிகே, பெங்களூரு எஃப்சியை தோற்கடிக்க மொத்த பலத்துடன் களமிறங்கும். காயம்பட்டதிற்கு பின் திரும்பிய டேவிட் வில்லியம்ஸ், நட்சத்திர ஆட்டக்காரராக உள்ள ராய் கிருஷ்ணா மற்றும் சிறப்பான பங்களிப்பை அளித்து கொண்டிருக்கும் எடு கார்சியா ஆகியோர் அணியில் உள்ளது ஹபாசுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. பிரபிர் தாஸ் மற்றும் மைக்கேல் சூசைராஜ் ஆகியோரும் ஏடிகே அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.
ஆனால், அனுபவம் வாய்ந்த அனஸ் எடதோடிக்கா காயம் காரணமாக ஆறு மாதங்கள் ஆட முடியாமல் இருப்பதும், ஜேவியர் ஹெர்னான்டஸின் இடைநீக்கமும் ஏடிகே எஃப்சிக்கு சற்றே வருத்தமளிக்கிறது.
"நாங்கள் வலிமையாக இருந்தாலும், இது வரை நன்றாக விளையாடி இருந்தாலும், எங்கள் திறமையை நாங்கள் தொடர்ந்து காட்ட வேண்டும். பெங்களூரு எஃப்சியை நாங்கள் வீழ்த்தியாக வேண்டும். பெங்களூரு வலிமையான அணி. எப்போதும் எங்கள் குறிக்கோள் வெற்றி பெறுவது ஒன்று தான்," என்கிறார் ஹபாஸ்.
Photos Courtesy : ISL Media