பெங்களூரு : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெங்களூரு எஃப்சி மற்றும் ஏடிகே எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இந்த ஆட்டம் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 88வது நாள் ஆட்டம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கன்டிராவா மைதானத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் இதுவரை 17 மேட்சுகள் ஆடி 29 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரு எஃப்சி அணி, 17 ஆட்டங்களில் 33 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்த ஏடிகே எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்தித்தது.
இரு அணிகளுக்கிடையே வெறும் நான்கு புள்ளிகள் மற்றும் ஒரு இடமே வித்தியாசம் என்பதால், இந்தப் போட்டி சமமான பலமுள்ள அணிகளுக்கு நடுவே நடைபெறவுள்ள விறுவிறுப்பான ஆட்டம் என்னும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த சீசனில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பெங்களூரு எஃப்சி, தன்னுடைய கடந்த சில ஆட்டங்களில் ஏனோ சொதப்பியது. சென்னையின் எஃப்சிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தை பெங்களூரு எஃப்சி சமன் செய்த போதிலும், இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
கொச்சியில் நடைபெற்ற தன்னுடைய கடந்த ஆட்டத்தில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றது பெங்களூரு எஃப்சி. சொந்த மண்ணில் ஆட்டம் நடந்ததால், ஏடிகே எஃப்சியை வென்று விடலாம் என்னும் நம்பிக்கையில் இருந்தது. மேலும், வெற்றியை சுவைக்க அந்த அணியின் வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டனர்.
ஏடிகே எஃப்சியின் நிலைமையும் கிட்டத் தட்ட பெங்களூரு எஃப்சியைப் போலத் தான். அசுர பலத்துடன் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், தன்னுடைய கடந்த மேட்சில் சென்னையின் எஃப்சி அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. எனவே, தன் திறமையை நிரூபித்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள மும்முரமாக இருந்தது. ஆண்டானியோ ஹபாஸ் தலைமையிலான ஏடிகே, பெங்களூரு எஃப்சியை தோற்கடிக்க மொத்த பலத்துடன் களமிறங்கியது.
டாஸ் வென்ற பெங்களூரு எஃப்சி அணி இடது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது.
17வது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சியின் டிமாஸ், ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை தொடங்கினார்.
பெங்களூரு எஃப்சி தனது அணியில் 32வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. 35வது நிமிடத்தில் அதே அணியின் ஃபிராடர் ஒரு கோல் அடித்தார்.
ISL 2019-20 : ஜெயிக்காம விட மாட்டோம்.. அதிரடி திட்டம் போட்ட ஒடிசா.. பதிலடி கொடுக்க கேரளா தயார்!
45வது நிமிடத்தில் 3 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் பெங்களூரு எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
கோல்களுக்காக காத்திருந்த ஏடிகே எஃப்சி தனது அணியில் இரு மாற்றங்களை செய்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், 51வது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி அணியின் குர்சிம்ரத்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த அணி ஒரு மாற்றத்தை செய்தது. 68வது நிமிடத்தில் பெங்களூரு அணி இன்னொரு மாற்றத்தை செய்தது.
70வது நிமிடத்தில் ஏடிகே அணி ஒரு மாற்றத்தை செய்த நிலையில், 72வது நிமிடத்தில் அந்த அணியின் ஜான்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 82வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுரேஷுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
86வது நிமிடத்தில் ஏடிகே எஃப்சியின் எடு கார்சியா அந்த அணியின் முதல் கோலை அடித்தார். 90வது நிமிடத்தில் அதே அணியின் சூசை இன்னொரு கோலை அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இதைத்தொடர்ந்து கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றிருந்தன.
Photos Courtesy : ISL Media