பெங்களூரு : இந்தியன் சூப்பர் லீக் தொடரில் ஒடிசா எஃப்சியை தனது சொந்த மண்ணில் உள்ள ஸ்ரீ கன்டிராவா மைதானத்தில் புதன்கிழமையன்று எதிர்கொள்கிறது, பெங்களூரு எஃப்சி அணி. இந்த மோதல் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது,
மும்பை சிட்டி எஃப்சியுடனான இரு தோல்விகளுக்குப் பிறகு இந்த போட்டியில் கலந்துகொள்ளும் பெங்களூரு எஃப்சி, வெற்றியை சுவைக்க முனைப்பாக உள்ளது. அதே சமயம், நான்கு வெற்றிகளுடன் பலமாக உள்ள ஒடிசா எஃப்சி, பெங்களூருவை வீழ்த்தும் நம்பிக்கையில் உள்ளது.
இந்தப் போட்டியில் யார் வெற்றி பெற்றாலும், அந்த அணி அடுத்த கட்டத்துக்கு செல்லும் நிலையில் உள்ளது. 22 புள்ளிகளுடன் தற்சமயம் மூன்றாம் இடத்தில் உள்ள பெங்களூரு எஃப்சி, இந்த வெற்றியின் மூலம் தலா 24 புள்ளிகள் எடுத்துள்ள எஃப்சி கோவா மற்றும் ஏடிகேவை கடந்து முன்னேறலாம். 21 புள்ளிகளை எடுத்துள்ள ஒடிசாவோ, எஃப்சி கோவா மற்றும் ஏடிகேவை இந்த வெற்றியின் மூலம் சமன் செய்யலாம்.
இந்த முக்கியமான போட்டியைப் பற்றி பேசும் ஒடிசா அணியின் கோச் ஜோசப் கொம்பாவ், "கடந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று நாங்கள் வலுவான நிலையில் உள்ளோம். இருந்தாலும், பெங்களூரு திறமையான மற்றும் சிறந்த அணி என்பதால், இந்தப் போட்டி கடினமானதாக இருக்குமென்றே நினைக்கிறோம். இதில் நாங்கள் வென்றால் பெங்களூருவை முன்னேறி செல்ல முடியும். எனவே வெற்றி பெற எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம்" என்கிறார்.
பெங்களூரு எஃப்சியின் கார்லெஸ் குட்ராட் பேசுகையில், "எங்களது கடந்த ஆட்டத்தின் தோல்வியால் நாங்கள் துவண்டு போனது உண்மை தான். ஒருவரின் தவறான முடிவு ஒட்டுமொத்த அணியையே பாதிக்கும். ஆனால், தற்போது நாங்கள் வெற்றியை சுவைக்கும் முடிவோடு உள்ளோம். ஏனென்றால், வெற்றி ஒன்றே எங்கள் தற்போதைய நிலையை மாற்றும்" என்கிறார்.
எட்டு கோல்களை எடுத்த சுனில் சேத்ரியை தவிர பெங்களூருவுக்கு மிகுந்த நம்பிக்கை கொடுக்க யாருமில்லை. ஆஷிக் குருனியானும் உதந்தா சிங்கும் கடந்த ஆட்டத்தில் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே, மேனுவல் ஓன்வு மற்றும் டேஷோர்ன் பிரவுன் ஆகியோர் சேத்ரிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என நம்பலாம்.
குட்ராட் மேலும் பேசுகையில், "இந்தப் போட்டி மிக முக்கியமான போட்டியாகும். விளையாட எங்களுக்கு இன்னும் 15 புள்ளிகளே உள்ளன. ஆனால் எதிர்கொள்ளப்போகும் ஒடிசாவோ நல்ல திறமையுடன் உள்ளது. இருந்தாலும் வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற நாங்கள் கடுமையாக உழைப்போம்" என்கிறார்.
ஒடிசாவோ, தன்னுடைய மொத்த வித்தைகளையும் இறக்க முனைப்பாக உள்ளது. பெங்களூருவை தோற்கடித்தால் ஒடிசா தொடர்ந்து 5 ஆட்டங்களில் வென்ற அணி என்ற பெயரை எடுத்து, இந்த ஐஎஸ்எல் தொடரில் இது வரை அதிகமாக தொடர்ந்து வென்றுள்ள கோவாவை முந்தும்.
இது குறித்து பேசும் கொம்பாவ், "பெங்களூரு திறமையான அணி என்பதில் மாற்று கருத்தில்லை. அதுவும், இதில் அவர்கள் எங்களுக்கு கடினமான சவாலாக இருப்பார்கள். இருப்பினும், நாங்கள் எங்கள் சிறந்த ஆட்டத்தை தருவோம். அவர்கள் தங்கள் ஆடும் முறையை மாற்றினாலும், நாங்கள் எப்போதும் போல் ஆடுவோம்," என்றார்.
அரிடேன் சன்டானா மற்றும் ஸிஸ்கோ ஹெர்னான்டெஸ் ஒடிசாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார்கள். ஒன்பது கோல்களை இந்த சீசனில் எடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சன்டானா ஒடிசாவுக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பார் என நம்பப்படுகிறது. அதே சமயம், வினித் ராயின் நீக்கமும், நந்தகுமார் சேகரின் காயமும் ஒடிசாவுக்கு வருத்தமளிக்கும் விஷயங்கள்.