பெங்களூரு : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெங்களூரு எஃப்சி மற்றும் ஒடிசா எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 64 ஆம் நாள் ஆட்டம் பெங்களூருவில் உள்ள உள்ள ஸ்ரீ கன்டிராவா மைதானத்தில் நடைபெற்றது.
மும்பை சிட்டி எஃப்சியுடனான இரு தோல்விகளுக்குப் பிறகு இந்த போட்டியில் தனது சொந்த மண்ணில் கலந்துகொண்ட பெங்களூரு எஃப்சி, வெற்றியை சுவைக்க ஆரம்பம் முதலே முனைப்பாக இருந்தது. அதே சமயம், நான்கு வெற்றிகளுடன் பலமாக இருந்த ஒடிசா எஃப்சி, பெங்களூருவை வீழ்த்தும் நம்பிக்கையில் இருந்தது.
புதன்கிழமையன்று யார் வெற்றி பெற்றாலும், அந்த அணி அடுத்த கட்டத்துக்கு செல்லும் நிலையில் இருந்ததால் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. இதில் டாஸ் வென்ற ஒடிசா எஃப்சி அணி வலது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தனது ஆதிக்கத்தைக் காட்ட தொடங்கிய பெங்களூரு எஃப்சி, 23 வது நிமிடத்தில் தனது முதல் கோலை போட்டது. பிரவுன் சீனியர் அடித்த இந்த கோல் மூலம் தன் கணக்கை தொடங்கிய பெங்களூரு, அப்போது முதலே ஒடிசாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது.
அடுத்த இரண்டு நிமிடங்களில் (25) தனது இரண்டாவது கோலை ராகுல் மூலம் எடுத்த பெங்களூரு எஃப் சி, தனது வெற்றி பயணத்தை தொடர ஆரம்பித்த நிலையில், சுதாரித்து கொண்ட ஒடிசா 33 மற்றும் 34 ஆம் நிமிடங்களில் தனது அணியில் மாற்றங்களை செய்தது. 37 ஆவது நிமிடத்தில் பெங்களூருவின் கப்ராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
45 வது நிமிடத்தில் ஒடிசாவின் ஷுபமுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்ட நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில், பெங்களூரு அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆரம்பித்து, ஒடிசா எப்போது தனது முதல் கோலை எடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 49 மற்றும் 57 ஆவது நிமிடங்களில் பெங்களூரு அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
60 ஆவது நிமிடத்தில் பெரெஸ் குடெஸுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 61வது நிமிடத்தில் ஆட்டத்தின் வெற்றியை தீர்மானித்த மூன்றாவது கோலை சேட்ரி மூலம் பெங்களூரு எடுத்தது. அதன் பிறகு அணியில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதும் ஒடிசாவால் கோல்கள் எடுக்க முடியாத நிலையில், 79 ஆவது நிமிடத்தில் அந்த அணியின் டெல்காடோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
அதே போல், 82 வது நிமிடத்தில் பெங்களூருவின் சேட்ரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இந்நிலையில், எவ்வளவு முயன்றும் ஒடிசாவால் கோல் எதுவும் எடுக்க முடியாததால், 3க்கு 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.