சென்னை : சென்னையின் எஃப்சி வீரர் ஜிஜி லால்பெக்குலாவின் ஆட்டத்தை அண்மைக் காலமாக பார்க்க முடியாமல் இருந்தது.
ஆனால், சென்னையின் எஃப்சிக்காக அதிக போட்டியில் ஆடிய இந்த வீரர் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டெழுந்து மீண்டும் கால்பந்து களம் காண உள்ளார்.
ஐஎஸ்எல் ஆறாவது சீசனில் களம் காணும் முன் அவர் பல தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
(கே) கடந்த சீசனில் நீங்கள் முழுமையும் ஆட முடியாமல் போய் இப்போது மீண்டும் களம் காண உள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?
கடந்த சில ஆண்டாகவே கால் மூட்டில் பல பிரச்னைகள் இருந்தன. அதோடுதான் விளையாடி வந்தேன். ஆனால் அணிக்காக அதிக பட்ச திறமையை வெளிப்படுத்தினேன். இப்போது அறுவை சிகிச்சைக்கு பின் ஆட ஆர்வமாக உள்ளேன். சக வீரர்களை காண்பதும் ரசிகர்கள் முன்னிலையில் ஆடப்போவதும் உற்சாகம் தருவதாக உள்ளது.
(கே) இந்த சீசனில் நீங்கள் நிரூபிக்க வேண்டியது எதுவும் உள்ளதா?
இல்லை. நான் வேறு யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எனது திறமையை எனக்கு நானே நிரூபிக்க வேண்டும். இதுதான் என் தற்போதைய இலக்கு. அறுவை சிகிச்சைக்கு பின் களம் காண்பது எந்த ஒரு வீரருக்கும் கடினமான ஒன்று. ஆனால் மிக கடினமாக நான் உழைக்க வேண்டும். எனது நம்பிக்கையை பெருக்கி அதிகபட்ச திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
(கே) தேசிய அணியின் ஆட்டத்தை வெளியிலிருந்து பார்த்ததை எப்படி உணர்ந்தீர்கள்?
அது கடினமான ஒன்று. புதிய பயிற்சியாளரின் கீழ் வீரர்கள் மிக நன்றாக ஆடினர். தேசிய அணியின் நீல நிற ஆடையை அணிய முடியாமல் இருப்பது வேதனையான ஒன்றுதான். ஆனால் போட்டிகளை டிவியில் பார்த்தது மீண்டும் களமிறங்க என்னை ஊக்கப்படுத்தியது.
(கே) பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பற்று உங்கள் அபிப்ராயம் என்ன?
அவரது பாணிக்கு வீரர்கள் தங்களை மாற்றிக்கொண்டு விட்டனர். அவர்களின் ஆட்டம் நன்றாகவே உள்ளது. 2022 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் மீதமுள்ள போட்டிகளிலும் சிறப்பாக ஆடுவார்கள் என நம்புகிறேன். கத்தாருக்கு எதிராக அவர்கள் நன்றாக ஆடினர். அண்மைக்காலங்களில் இந்திய அணியின் மிகச்சிறந்த ஆட்டம் அது. இது தொடரும் என நம்புகிறேன்
(கே) தேசிய அணிக்கு எப்போது மீண்டும் திரும்புவீர்கள்?
முதலில் ஐஎஸ்எல்லில் கவனம் செலுத்தப் போகிறேன். இதில் உடல் திறமையை காட்டுவதுடன் நன்றாக ஆடுவது அவசியம். இதன் பின் தேசிய அணியில் இடம் பிடிக்க வேண்டுமென விரும்புகிறேன்.
(கே) சுனில் சேத்ரியின் வழித்தோன்றலாக உங்களை பார்க்க முடிகிறது. அவர் ஓய்வு பெற்றுவிட்டால் அவர் இடத்தை நிரப்ப நீங்கள் தயாரா?
தேசிய அணியில் மிக முக்கிய வீரர் அவர். அணியின் தூண் எனக் கூறலாம். அவர் தற்போது நன்றாகத்தான் ஆடி வருகிறார். இன்னும் பத்தாண்டுகளுக்கு அவர் ஆடுவார் என எதிர்பார்க்கிறேன். ஆனால் இப்போது திறமையான பல இளம் வீரர்கள் வந்துகொண்டே உள்ளனர். சேத்ரியின் இடத்தை நிரப்ப ஒருவர் மிகமிக கடினமாக உழைக்க வேண்டும். அவர் இப்போதைக்கு ஓய்வு பெறுவார் எனத் தோன்றவில்லை. அவர் இல்லையென்றால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. தற்போதைய அவரது செயல்பாடுகளுக்கு சமமான திறமையை வெளிக்காட்டுவது கடினம். எங்களுக்கு எல்லாமே அவர்தான்.
Photos Courtesy : ISL Media