சென்னை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது.
இதில் சென்னையின் எஃப்சி அணி ஹைதராபாத் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வென்றது.
6ஆவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 23 ஆம் நாள் ஆட்டம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சென்னையின் எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னையின் எஃப்சி அணி இடது புறமிருந்து ஆட்டத்தை தொடங்கியது.
ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே சென்னை அணியின் ரஃபேல் ஒரு கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது. மீண்டும் 7 ஆவது நிமிடத்திலும் சென்னை அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பும் பின்னர் நழுவிப் போனது.
ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்திலும் கிடைத்த வாய்ப்பை சென்னை அணி நழுவவிட்டது. இதே போல் ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சென்னை அணி வீரர்கள் இதை லாவகமாக தடுத்து நிறுத்தினர்.
ஆனால் இறுதி வரை இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் போபோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியிலும் 68 ஆவது நிமிடத்தில் சென்னை அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதே போல் 79 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டன. 84 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் குர்தேஜுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது சென்னை அணியின் ஸ்கெம்பிரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணியின் கில்காலன் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
பின்னர் மேலும் 2 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அப்போது சென்னை அணியின் வால்ஸ்கிஸ் ஒரு கோல் அடித்தார். பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சென்னையின் எஃப்சி அணி ஹைதராபாத் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வென்றது.