சென்னை : ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் தகுதிச் சுற்றில் இடம் பெறப்போவது எந்த அணி என்பதை முடிவு செய்யப் போகும் போட்டியொன்றில் தனது சொந்த மண்ணில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வியாழக்கிழமை அன்று சந்திக்கிறது சென்னையின் எஃப்சி.
இரு அணிகளும் பலமாக இருப்பதாலும், சிறந்த நான்கு அணிகளில் ஒன்றாக இடம்பெற மும்முரமாக இருப்பதாலும் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகளின் வரிசையில் 15 புள்ளிகள் பெற்று தொடர் வெற்றிகளுடன் 7 ஆவது இடத்தில் இருக்கும் சென்னையின் எஃப் சி அணி, கடந்த ஆட்டங்களில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளது. ஜம்ஷெட்பூரோ, ஆறு போட்டிகளில் தோற்றாலும் சமீபத்தில் கேரளா பிளாஸ்டர்ஸை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்று தகுதி சுற்றுக்கான ரேசில் மீண்டும் இடம் பெற்றுள்ளது.
சென்னை ஜவஹர்லால் நேரு அரங்கில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியின் முக்கியத்துவத்தை குறித்து ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் கோச் ஆன்டானியோ இரியோன்டோ கூறுகையில், "தகுதி சுற்றில் இடம்பெறப் போகும் நான்கு அணிகள் மூன்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில், நான்காம் இடத்துக்கான போட்டியில் நாங்கள் உள்ளோம். எங்கள் காயங்களை மறந்து வெற்றியை நோக்கி நாங்கள் களமிறங்கவுள்ளோம்," என்றார்.
தனது சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதாலும், இது வரை சென்னையில் நடந்த 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றிருப்பதாலும், சென்னையின் எஃப் சி 12 கோல்களை வெல்லும் முனைப்பில் அதிரடியாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரும்பு மனிதர்கள் எனக் கருதப்படும் ஜாம்ஷெட்பூர் அணியினரோ, இது வரை வெளியூர்களில் நடந்த போட்டிகளில் வெறும் இரண்டில் மட்டுமே வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெரினா மச்சான்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் சென்னையின் எஃப்சி அணியினர் தங்கள் மேலாளர் ஓவன் கோய்ல் தலைமையில் உற்சாகத்துடன் உள்ளனர். அவரது மேற்பார்வையில், ஆறு ஆட்டங்களில் 12 கோல்களை ரஃபேல் கிரிவெல்லாரோ மற்றும் நெரிஜுஸ் வல்ஸ்கிஸ் மூலம் அடித்து தெம்புடன் உள்ளனர்.
"ஜாம்ஷெட்பூர் கேரளா பிளாஸ்டர்ஸை வென்ற உற்சாகத்தில் களமிறங்கவுள்ளனர். நாங்கள் யாரென்று கடந்த ஆட்டங்களில் காட்டியுள்ள போதும், இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆட வேண்டும் என்ற நிலையில் நாங்கள் உள்ளோம். கடந்த காலங்களில் சில நல்ல வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டிருந்த போதும், எங்கள் கோல்களை நாங்கள் அதிகப்படுத்தியுள்ளோம். இன்னும் கொஞ்சம் திட்டமிடுதலுடன் விளையாடி போட்டியில் வெல்வோம்," என கோய்ல் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
சென்னையின் அணி உற்சாகமாக உள்ள நிலையில் ஜாம்ஷெட்பூரை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. ஜாம்ஷெட்பூரோ, டிரி கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயம் பட்டு வெளியேறியுள்ள நிலையிலும், மனம் தளராமல் உள்ளது.
"சென்னையின் அணியில் அடித்து ஆடும் சிறந்த ஆட்டக்காரர்கள் உள்ளனர். கோச்சையும் மாற்றியுள்ளதால், அவர்களின் உற்சாகமும், சக்தியும் அதிகமாகி உள்ளது. எங்களுக்காக விளையாட டிரி இல்லை என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், அதை சமன் செய்யக்கூடிய வகையிலான ஆட்டக்காரர்கள் எங்களிடம் உள்ளனர்," என்கிறார் இரியோன்டோ.
செர்கியோ காஸ்டெல் திரும்ப வந்திருப்பது ஜாம்ஷெட்பூருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. கேரளாவுக்கு எதிரான போட்டியில் பெனால்டி பெற்ற காஸ்டெல், சென்னையில் புது தெம்புடன் ஆட வருகிறார். ஃபரூக் சௌத்ரி, நோவ் அகோஸ்டா மற்றும் ஆய்ட்டர் மொன்ராய் நன்றாக ஆடும் நிலையில் இருப்பதால், அவர்கள் காஸ்டெல்லுக்கு பலம் சேர்ப்பார்கள் என நம்பப்படுகிறது. சென்னையா, ஜாம்ஷெட்பூரா? வெல்லப் போவது யார்?