சென்னை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 65வது நாள் ஆட்டம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் நடைபெற்றது. தகுதி சுற்றில் இடம் பெறப்போவது யாரென நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்க போகும் போட்டியென்பதாலும், சென்னையின் அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதாலும் எதிர்பார்ப்பு எகிறியது.
அணிகளின் வரிசையில் 15 புள்ளிகள் பெற்று தொடர் வெற்றிகளுடன் 7 ஆவது இடத்தில் இருந்த சென்னையின் எஃப்சி அணி, கடந்த ஆட்டங்களில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தது. ஜம்ஷெட்பூரோ, ஆறு போட்டிகளில் தோற்றாலும் சமீபத்தில் கேரளா பிளாஸ்டர்ஸை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்று நல்ல ஃபார்மில் இருந்தது.
ரசிகர்களின் பலத்த உற்சாகத்தின் நடுவே டாஸ் வென்ற சென்னையின் எஃப்சி அணி, வலது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.
சரியாக 13வது நிமிடத்தில் தனது முதல் கோலை வல்க்ஸிஸ் மூலம் பெற்ற சென்னையின் அணி பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணை பிளந்தது.
இதன் பின் ஜாம்ஷெட்பூர் அணி கடும் முயற்சிகள் செய்தும் கோல் எதுவும் எடுக்க முடியாத நிலையில், ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் சென்னையின் அணியின் ஷெம்ப்ரி ஒரு அபார கோலை அடித்தார். இதையடுத்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் சென்னையின் எஃப் சி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி தொடங்குவதற்கு முன்னரே ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 57 மற்றும் 60வது நிமிடங்களில் கோல்கள் எடுக்க வாய்ப்பிருந்த போதும், ஜாம்ஷெட்பூருக்கு ஜாக்பாட் அடிக்கவில்லை. இந்நிலையில் அந்த அதிசயம், அற்புதம் காஸ்டல் மூலம் 71வது நிமிடத்தில் நிகழ்ந்தது. ஒரு கோல் எடுத்த ஜாம்ஷெட்பூர் புதிய உற்சாகத்துடன் ஆட்டத்தை தொடர்ந்தது.
ஆனால், 75வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூரின் நம்பிக்கையை நசுக்கும் விதமாக, சென்னையின் அணியின் வல்க்ஸிஸ் ஒரு கோல் அடித்தார். 77வது நிமிடத்தில் சென்னையின் அணியில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஆட்டம் தனது கிளைமேக்சை நெருங்கியது. 85வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியிலும், 86வது நிமிடத்தில் சென்னையின் அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
மாற்றம் முடிந்தவுடன் ஏற்றம் எனும் வகையில், 87வது நிமிடத்தில் சென்னையின் அணியின் சங்க்ட்டே ஒரு கோல் எடுத்து ஜாம்ஷெட்பூரை சங்கடத்தில் ஆழ்த்தினார். 89வது நிமிடத்தில் சென்னையின் அணியின் டின்லியானவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதே சமயத்தில் சென்னையின் அணியில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டது. பின்னர் ஐந்து நிமிடங்கள் கூடுதலாக தரப்பட்டன.
கடைசி நிமிடங்களும் ஜாம்ஷெட்பூரை கரை சேர்க்காத நிலையில், சென்னையின் அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.