சென்னை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி மற்றும் மும்பை சிட்டி அணிகளிடையே நடைபெற்ற ஆட்டம் 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 8 ஆம் நாள் ஆட்டம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சென்னையின் எஃப்சி அணியும், மும்பை சிட்டி எஃப்சி அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி ஆட்டத்தைத் தொடங்கியது. சென்னை அணிக்கு அதன் வீரர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 13 ஆவது நிமிடத்தில் சென்னைக்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது கைநழுவிப் போனது.
24 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 29 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ரெய்னருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 33 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் போர்ஜசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
45 ஆவது நிமிடம் வரை இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் தரப்பட்டன. பின்னர் முதல் பாதி ஆட்டம் நிறைவு பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை சிட்டி அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.
இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் 59 ஆவது நிமிடத்தில் மும்பையின் லார்பிக்கு மஞ்கள் அட்டை காண்பிக்கப்பட்டது. 62 ஆவது நிமிடத்தில் மும்பையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
68, 75 ஆவது மற்றும் 81 ஆவது நிமிடங்களில் சென்னை அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதே போல் ஆட்டத்தின் 83 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ஆங்கோ வெளியேற்றப்பட்டு பிபின் களமிறங்கப்பட்டார். ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சக்ரபர்திக்கு இரண்டு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இரு அணிகளும் கடைசி வரை கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டம் 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
Photos Courtesy : ISL Media