சென்னை : சென்னையின் எஃப்ஸி அணியை பொறுத்தவரை கடந்த சீசன் மறக்கப்பட வேண்டிய ஒன்று. நடப்பு சாம்பியனாக கடந்த சீசனில் களமிறங்கிய சென்னையின் அணியின் ஆட்டம் அந்த கவுரவத்திற்கு உரிய வகையில் இல்லை.
பயிற்சியாளர் ஜான் கிரெகோரியின் நிலை கூட பரிதவிக்கத்தக்க நிலையில் இருந்தது. அவரால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அணி 10 அணிகள் விளையாடிய ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கில் கடைசி இடத்தில் சீசனை முடித்தது.
2 முறை ஐஎஸ்எல் மகுடம் சூடிய சென்னையின் எஃப்ஸி அணிக்கு இது நிச்சயம் நம்ப முடியாத மோசமான முடிவு. இம்மாதத்தின் 2வது பாதியில் தொடங்கும் 6வது ஐஎஸ்எல் சீசனில் இழந்த பெருமையை மீட்கும் துடிப்பில் களமிறங்க உள்ளது சென்னையின் எஃப்ஸி.
சென்னையின் அணியின் ஐஎஸ்எல் பயணம் ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. இவை ஆட்டக்களத்தில் மட்டுமல்ல... பிற தளங்களிலும் இருந்தன. அபிஷேக் பச்சன், மகேந்திர சிங் தோனி, விட்டு டானி ஆகியோரை இணை உரிமையாளர்களாக கொண்டது இந்த அணி.
2014ல் ஐஎஸ்எல் அறிமுகமானதிலிருந்து சென்னையின் அணியின் கவனம் இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதிலும் இருந்தது. இதில் அந்த அணி பிற அணிகளுக்கு சற்றும் சளைத்ததல்ல.
ஐஎஸ்எல்லில் 2 சீசன்களில் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு பயிற்சி மையத்தில் தயாரான 5 இளம் வீரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது சென்னையின். இவர்கள் எஃப்ஸி மெட்ஸ்-க்கும் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர்.
3 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஐவரின் ஆட்டம் அபாரமாக இருந்தது. சென்னையின் அணியின் முதலீடு பலன் தந்துவிட்டது.
அனிருத்தா தாப்பா, ஜெர்ரி லால்ரின்ஜுவாலா, பாவோரிங்டாவ் போடோ, பெதோஸ்வர் சிங், புரொசென்ஜித் சக்ரொபோர்த்தி ஆகிய அந்த ஐவரும் தற்போது அணியில் தொடர்ந்து இடம்பெறும் தொழில் முறையில் ஆடும் வீரர்கள் ஆக உள்ளனர். இதில் தாப்பாவும் லால்ரின்ஜுவாலாவும் சென்னையின் அணியில் முதன்மையாக இடம் பெறுகிறார்கள்.
கடந்த 2 சீசனில் 34 ஆட்டங்களில் இடம் பெற்றுள்ளார். இதில் 2 கோல்கள் அடித்ததுடன் 3 கோல்களுக்கு உதவியுள்ளார். வெளிநாட்டிலிருந்து திரும்பிய லால்ரின்ஜுவாலா ஐஎஸ்எல்லில் 3,658 நிமிடங்கள் ஆடியுள்ளார். இதில் ஒரு கோல் அடித்துள்ளார். 4 கோல்கள் அடிக்க துணை நின்றுள்ளார்.
சென்னையின் எஃப்ஸி கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஹிம் அலி, அபிஜித் சர்க்கார், தீபக் தாங்ரி ஆகிய 20 வயதுக்குட்பட்ட 3 இளைஞர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. நாட்டின் பல்வேறு அணிகளுக்காக ஆடிய 13 வீரர்களை தாங்கள் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி என்கிறார் சென்னையின் எஃப்ஸி அணியின் இணை உரிமையாளர் விட்டா டானி.
ரஹிம், அபிஜித், தீபக் ஆகியோரை சேர்த்தது இளைஞர்களின் எழுச்சிக்கு கை கொடுக்கும் தங்கள் ஆர்வத்தை காட்டுகிறது என்கிறார் டானி.
தாப்பா நாட்டுக்காகவும் கிளப்புகளுக்காகவும் நன்கு ஆடி வருகிறார். அவர் நாட்டின் மிகச்சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 2018ம் ஆண்டு சென்னை பட்டம் வெல்ல உதவியாக இருந்தவர்களில் லால்ரின்ஜுவாலாவும் ஒருவர். இந்தியாவின் சிறந்த ஃபுல் பேக் வீரர்களில் ஒருவராக இவர் உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது.
புரொசென்ஜித் மினர்வா பஞ்சாப்புக்காகவும் பெதோஸ்வர் சிங் டிராவ் எஃப்ஸி-க்காகவும் ஆடி தங்களை வலுப்படுத்திக் கொண்டுள்ளனர். மினர்வா, கோகுலம் கேரளா, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்காக போடோ ஆடியுள்ளார். சென்னையின் அணி எடுத்த முன்முயற்சிதான் இந்த இளம் வீரர்கள் ஜொலிக்க காரணம்.