சென்னை: சென்னை எஃப்ஸி அணியின் வீரர் லாலியன்ஸுவாலா சாங்டே ஐரோப்பாவில் தனது போட்டிகளை முடித்த பின்னர் தற்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இந்த இளைஞர் நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய வீரர்களில் ஒருவராக உள்ளார். இப்போது சென்னையின் எஃப்சி அணி ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கில் மகுடம் சூடுவதற்காக உழைத்து வருகிறார்.
ஆறாவது சீசனுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் லாலியன்ஸுவாலா சாங்டே பேசினார். அப்போது செய்தியாளர்கள் பல கேள்விகளை அவரிடம் எழுப்பினர். அவற்றுக்கு சாங்டே அளித்த பதில்கள் பின்வருமாறு!
உங்களை ஒப்பந்தம் செய்ய எல்லா கிளப்களும் துரத்தும்போது, அனைவருக்கும் மேலாக சென்னையின் எஃப்சி அணியை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
முதலாவதாக சென்னையுடன் இணைந்திருக்கும் முடிவே சிறந்ததாக இருக்கும் என்று நம்பினேன். சென்னையின் எஃப்சி அணி மற்ற கிளப்புகளை விட என்னை ஒப்பந்தம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். மேலும் அவர்கள் என்னை நேசிக்க வைத்தார்கள். சென்னை அணியின் பயிற்சியாளர் என்னை அழைத்து தனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி கூறினார். அவர் எனது வளர்ச்சிக்கு உதவ தயாராக இருக்கிறார். அதனால் நான் இந்த கிளப்புக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
நார்வே கிளப்பான வைக்கிங் எஃப்சி அணிக்காக நீங்கள் இரண்டு முறை விளையாடியுள்ளீர்கள். உங்கள் அடுத்த ஐரோப்பிய கனவு என்ன?
நார்வே வைகிங் எஃப்சி அணியில் விளையாடியது எனக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. தற்போது எனது கவனம் முழுவதும் சென்னை எஃப்.சி. அணியின் மீதுதான் உள்ளது. இந்தியன் சூப்பர் லீக் பட்டத்தை மீண்டும் அந்த அணிக்கு பெற்றுத்தர நிச்சயமாக நான் உதவுவேன். ஒரு கால்பந்து வீரராக, நான் மீண்டும் ஐரோப்பாவில் விளையாட விரும்புகிறேன், ஆனால் இப்போது நான் கடுமையாக பயிற்சி செய்வதிலும், கிளப் மற்றும் இந்திய நாட்டிற்காக செயல்படுவதிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்றார் லாலியன்ஸுவாலா சாங்டே.
சென்னையின் எஃப்சி அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்தது ?
அவர்கள் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அது ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட ஒன்று. எங்கள் அணியில் தற்போது பல புதிய வீரரர்கள் இணைந்துள்ளனர். மேலும் அணி ஒரு நிலைத் தன்மையுடன் உள்ளது. ஊழியர்கள் மிகவும் தாழ்மையுடன் நடந்து கொள்கின்றனர். அவர்களுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. மிக முக்கியமாக, நாங்கள் ஏற்கனவே ஒரு சிறந்த பயிற்சியாளரைக் கொண்டுள்ளோம், அவர் ஏற்கனவே பட்டத்தை வென்றுள்ளார். அது மட்டுமல்லாமல் கிளப்பை மீண்டும் மேலே கொண்டு வர வேண்டும் என அவர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். டைட்டிலை வென்றெடுக்கத்தான் இந்த ஆண்டு நாங்கள் முயற்சிக்கிறோம். அதை அடைவதற்கான தகுதி எங்களிடம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
டெல்லி டைனமோஸில் ஏற்பட்ட அனுபவத்தை எவ்வாறு விவரிப்பீர்கள்?
அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்தார்கள், அது ஒரு உண்மையான திருப்புமுனை போன்றது. அதற்காக நான் அந்த அணிக்கு உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அந்த அணியின் அத்தனை ஊழியர்களும் எனக்கு மிகவும் நன்றாக உதவி செய்தனர். அவர்களின் உதவி எனக்கு கிடைக்காமல் போயிருந்தால் நான் இன்று ஒரு கால்பந்து வீரராக இருந்திருக்க மாட்டேன் என்றார்.
நீங்கள் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் ஆகும்போது மிகவும் இளமையாக இருந்தீர்கள்! ஆரம்ப அறிமுகத்திற்குப் பிறகு அந்த திறமை மறைந்துவிடும் என்று நீங்கள் பயந்தீர்களா?
அறிமுகம் ஆனபோது கோல் அடித்ததும், பின்னர் 2015 இல் சாம்பியன்ஷிப்பை வென்றதும் எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. நேர்மறையாக இருக்கவும் கடினமாக உழைக்கவும் அதிலிருந்து கற்றுக்கொண்டேன்.
இப்போது இகோர் ஸ்டிமாக் உடன் பணிபுரிவது பற்றி உங்கள் கருத்து என்ன?
அவர் ஒரு சிறந்த பயிற்சியாளர். வீரர்களை நன்றாக புரிந்துகொள்கிறார். மேலும் அவர் வீரர்களிடையே ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் போட்டியை ஏற்படுத்தி வருகிறார். இதனால் எல்லோரும் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பயிற்சியின்போது மைதானத்தில் நீங்கள் சிறப்பாகச் செய்தால் போதுமானது. நீங்கள் எவ்வளவு வயதானவராக இருந்தாலும், இளமையாக இருந்தாலும், நீங்கள் விளையாடுவீர்கள். அவர் வீரர்கள் அனைவரிடமிருந்தும் சிறந்ததையே வெளியே கொண்டு வருகிறார்.
கத்தாருக்கு எதிராக எடுத்த புள்ளியை மறக்க முடியுமா ?
அது அணிக்கு ஒரு அருமையான முடிவு மற்றும் நாட்டுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நான் ஒரு அணி மனப்பான்மை கொண்ட வீரர். அணி வெல்கிறதா என்பது பிரதானம். போட்டியில் யார் நன்றாக ஆடினார் என்பதல்ல. ஒரு தனி நபராக, நான் கடினமாக உழைக்க விரும்புகிறேன், ஒவ்வொரு நாளும் என்னை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். கத்தார் அணிக்கு எதிரான போட்டியின் முடிவு மற்றும் செயல்பாடுகள் அனைவருக்கும் ஒரு பெரிய உந்து சக்தியாக இருந்தது. ஆனால் நாங்கள் இப்போது சிறப்பாக செயல்படுவதிலும் பங்களாதேஷுக்கு எதிராக வெற்றி பெறுவதிலும் கவனம் செலுத்துகிறோம். இப்படி கூறி முடித்தார் லாலியன்ஸுவாலா சாங்டே.