கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் எஃப்சி கோவா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த செர்ஜியோ லோபெராவின் வெளியேற்றத்திற்கு பிறகு, அந்த அணி ஹைதராபாத் எஃப்சியை கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் சந்திக்கிறது.
முதலிடத்துக்காக பெங்களூரு எஃப்சி மற்றும் ஏடிகே ஆகிய அணிகளுடன் போட்டியில் உள்ள எஃப்சி கோவாவிற்கு இந்த வெற்றியின் மூலம் ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கிலும் பங்கு பெற வாய்ப்புகள் பிரகாசமாகும். லோபெராவை நீக்கிய கோவா அணியின் நிர்வாகம் அவருக்கு பதில் கிளிஃபார்டு மிராண்டாவை இடைக்கால கோச்சாக நியமித்துள்ளது. டெரிக் பெரைரா தொழில்நுட்ப இயக்குனராக இருக்கிறார்.
"அணியும் ஒற்றுமையும், ஒருங்கிணைந்த ஆட்டமுமே என்னுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கும். திறமையான அணியாக இருந்தாலும், திடமான மனநிலை மிகவும் முக்கியம். எஃப்சி கோவா அணியினரிடையே பாசிட்டிவ் சக்தியை காண்கிறேன். வீரர்களையும், பயிற்சியின் போது அவர்கள் எடுத்த முயற்சிகளையும் நான் மதிக்கிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது," என்கிறார் பெரைரா.
இதுவரை 15 ஆட்டங்களில் 32 கோல்களை அடித்து கோவா தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது. சொந்த மண்ணில் ஆடுவதற்கு இன்னும் ஒரே ஆட்டத்தை மிச்சம் வைத்துள்ள கோவா, தனது மொத்த வித்தையையும் இந்தப் போட்டியில் காட்டும் என்றே எதிர்பார்க்கலாம். எடு பிடியா தற்காலிமாக நீக்கப்பட்டிருந்தாலும், அகமது ஜஹோஹ் எஃப்சி கோவா அணிக்கு வலு சேர்ப்பார் என நம்பலாம்.
ஹைதராபாத் எஃப்சியை பொறுத்த வரை 15 ஆட்டங்களில் 6 புள்ளிகள் எடுத்துள்ள நிலையில், மோசமான அணி என்னும் பெயர் எடுப்பத்தை தடுக்க 4 புள்ளிகள் தேவைப்படுகிறது. 33 கோல்களை இது வரை எதிரணியினருக்கு வாரி வழங்கியுள்ளது அந்த அணியின் கோச் ஜேவியர் லோபஸ்ஸுக்கு வருத்தம் தரக் கூடிய விஷயமாக இருக்கும்.
பெங்களூரு அணியுடனான தோல்விக்கு பின் கோவாவை களம் காணும் ஹைதரபாத், எப்படியாவது தன்னை நிரூபித்து விட வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. அதற்காகவே சவ்விக் சக்ரபர்த்தி மற்றும் ஹிதேஷ் ஷர்மா ஆகிய வீரர்களை அணியில் சேர்த்துள்ளது.
"ஹிதேஷ் இளைமையான, திறமையான வீரர். அவருக்கு சவாலான நேரங்களில் எப்படி விளையாடுவது என்பது தெரியும். தொழில்நுட்ப அறிவும் நிறைந்தவர்," என்கிறார் லோபஸ். மேலும் அவர் கூறுகையில், "நிகில் பூஜாரி ஏற்கனவே தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கோவாவுடனான போட்டியை அவர் தன்னை மறுபடியும் நிரூபிக்க தங்கமான வாய்ப்பாக கருதுகிறார். இதன் மூலம் இந்திய கால்பந்துக்கு வலிமை சேர்த்த லோபெராவுக்கு அவர் மரியாதை செலுத்த நினைக்கிறார்," என்றார்.
எஃப்சி கோவா முதலிடத்தை நோக்கி முந்துமா, அல்லது ஹைதரபாத் எஃப்சி அவப்பெயரை தவிர்க்குமா?