கோவா : இந்தியன் சூப்பர் லீக்கில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் முதல் இடத்தை பெற ஏடிகே மற்றும் பெங்களூரு எஃப்சி உடன் மும்முனைப் போட்டியில் இருக்கும் எஃப்சி கோவா, கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியை தனது சொந்த மண்ணில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தால், கோவாவால் ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் பங்கு கொள்ள இயலும்.
எஃப்சி கோவா அணியின் கோச் செர்ஜியோ லொபேரா, "இனிமேல் ஒவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு இறுதி ஆட்டம் போலத் தான். மிக முக்கியமான இந்தப் போட்டியில் நாங்கள் மிகவும் கவனமாக எங்கள் அடிகளை எடுத்து வைப்போம். இது எங்களுக்கு பெரிய சவால் மட்டுமல்ல, மிகப் பெரிய வாய்ப்பும் கூடத் தான்," என்கிறார்.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் வெற்றி பெறும் முனைப்பில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஏனென்றால், இந்தப் போட்டியின் வெற்றி மூலம், முதல் நான்கு அணிகளுள் ஒன்றாக இடம்பெறும் தனது கனவை நனவாக்குவது கேரளாவுக்கு எளிதாக இருக்கும்.
அந்த அணியின் கோச் ஈல்கோ ஷாட்டோரி கூறுகையில், "முதல் நான்கு அணிகளில் ஒன்றாக திகழ்வதற்கு இன்னும் எங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல், அதை அடைவதற்கான செயல்திட்டத்திலும் முனைப்பாக உள்ளோம். ஏனென்றால், ஒழுங்கான திட்டமிடலுடன் செயல்பட்டால், வெற்றி தன்னால் வரும். அணியினர் அனைவரும் நம்பிக்கையோடு உள்ளோம்," என்கிறார்.
ஏடிகே உடனான தோல்விக்கு பிறகு மீண்டு எழுவதற்கு தயாராக உள்ள கோவா அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் உற்சாகாத்துடனே இருக்கும் என நம்பலாம். தாய் மண்ணில் நடைபெற்ற கடந்த மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து ஜெயித்துள்ள கோவா அணி, வெளியூர்களில் தோற்பதை பழக்கமாகக் கொண்டுள்ள கேரளா அணியை சனிக்கிழமை எதிர்கொள்கிறது.
"நாங்கள் அவர்களுடன் கடந்த முறை விளையாடியதைக் காட்டிலும் தற்போது வலுவான நிலையில் கேரளா அணி உள்ளது. நல்ல வீரர்களும் அவர்களுடன் உள்ளனர். தன்னுடைய கடந்த மேட்சில் கேரளா தோற்றிருக்கலாம். ஆனால், அவர்களுடனான போட்டி எங்களுக்கு சவால் என்பதில் மாற்றுக் கருத்தில்லை," என்கிறார் லொபேரா.
இது வரை கேரளா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டங்களில் லொபேரா நான்கில் வென்று காட்டியுள்ளார், ஒன்றை டிரா செய்துள்ளார். அதே சமயம், கோவா அணிக்கு கவலைகளும் இல்லாமல் இல்லை. இது வரை எந்த அணியுமே இந்த சீசனில் அடிக்காத 25 கோல்களை அடித்துள்ள போதிலும், கடந்த 3 ஆட்டங்களில் 44 முறை முயன்ற போது வெறும் 3 கோல்களையே கோவாவால் எடுக்க முடிந்தது. ஆனால், ஃபெர்ரான் கோராமினாஸ், மன்வீர் சிங், ஹூகோ பௌமோஸ் மற்றும் பிராண்டன் ஃபெர்னான்டஸ் ஆகிய வீர்ரகள் கோவாவுக்கு பலம் சேர்ப்பார்கள் என நம்பலாம்.
கோல்களை தடுக்காமல் விட்டதால் இதுவரை இழப்புகளை சந்தித்துள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, இந்த முறை சுதாரிப்புடன் உள்ளது. ஷாட்டோரி கூறுகையில், "ஒரு அணி எப்படி கால்பந்தை விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேனோ, அப்படி ஆடுகிறது கோவா அணி. இந்த முறை சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம்," என்கிறார்.
மெஸ்ஸி பவுலி மற்றும் ஒபிச்சி ஆகியோர் அணியில் உள்ளதால், கேரளா நம்பிக்கையுடன் உள்ளது. கோவா அணியும் வெற்றியை பெற முழு முனைப்புடன் உள்ளது. இந்த வீக்கென்ட் கோவாவில் பார்ட்டி கொண்டாடப் போவது யார்?
Photos Courtesy : ISL Media