கோவா : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் எஃப்சி கோவா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 67வது நாள் ஆட்டம் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் முதல் இடத்தை பெற ஏ டி கே மற்றும் பெங்களூரு எஃப்சி உடன் மும்முனைப் போட்டியில் இருந்த எஃப்சி கோவா, மிகுந்த நம்பிக்கையுடன் கேரளா பிளாஸ்டர்ஸை சந்தித்தது.
ஏனென்றால், இதில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தால், கோவாவால் ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் பங்கு கொள்ள இயலும். அதே சமயம், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் வெற்றி பெறும் முழு முனைப்பில் இந்த ஆட்டத்தை எதிர்கொண்டது. காரணம் - இன்று பெரும் வெற்றியால், முதல் நான்கு அணிகளுள் ஒன்றாக இடம்பெறும் தனது கனவை நனவாக்கிக் கொள்ளும் நிலையில் இருந்தது.
எனவே, ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன் இருந்தே பரபரப்பு நிலவியது. தாய் மண்ணில் நடைபெற்ற கடந்த மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து ஜெயித்துள்ள கோவா அணி, வெளியூர்களில் தோற்பதை பழக்கமாகக் கொண்டுள்ள கேரளா அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொண்டதால், கோவா அணியின் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சியில் இருந்தனர்.
டாஸ் வென்ற கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி, வலது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது. இரு அணிகளின் பலப்பரீட்சைக்கு மத்தியிலும் கோல் எதுவும் விழாத நிலையில், 24வது நிமிடத்தில் கேரளா அணியின் டிரொபரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. சரியாக 26வது நிமிடத்தில் ரசிகர்களின் உற்சாகத்துக்கு இடையே கோவா அணியின் பவுமவுஸ் ஒரு கோல் அடித்தார்.
முதல் பாதி முடிவுக்கு வரும் வேளையில் இரு நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 45வது நிமிடத்தில் கோவா அணியின் ஜாக்கி ஒரு கோல் அடித்தார். பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் எஃப்சி கோவா அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது
இரண்டாவது பாதி ஆட்டத்தை மிகுந்த நம்பிக்கையுடன் ஆரம்பித்த கோவா அணியின் உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 53வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து தன் அணியின் கணக்கை ஆரம்பித்து வைத்தார். 64வது நிமிடத்தில் கேரளா அணியின் மவுஸ்தஃபாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
சரியாக 69வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ஒபிச்சி ஒரு கோல் அடித்து இரு அணிகளுக்கிடையேயான இடைவெளியை சமன் செய்தார். இதனால் கோவா அணியின் வீர்ரகளுக்கும் ரசிகர்களுக்கும் பிரஷர் ஏறியது. 75வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியில் மாற்றம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 78வது நிமிடத்தில் எஃப்சி கோவா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 82வது நிமிடத்தில் கோவா அணியின் பிரண்டனுக்கும், 83வது நிமிடத்தில் கேரளா அணியின் சிடோவுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இரு அணிகளும் சமமான கோல் கணக்கில் இருந்த நிலையில், 83வது நிமிடத்தில் கோவா அணியின் பவுமவுஸ் ஒரு கோல் அடித்தார். 85வது நிமிடத்தில் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த கேரளா, 87வது நிமிடத்தில் அணியில் மாற்றம் செய்தது. 90வது நிமிடத்தில் 5 நிமிடங்கள் கூடுதலாக தரப்பட்டன. இருந்தும் கேரளாவால் கோல் எண்ணிக்கையை உயர்த்த முடியவில்லை. இந்நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்து எஃப்சி கோவா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.