கோவா : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா அணி மற்றும் மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் எஃப்சி கோவா அணி 5 - 2 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஏழு கோல்கள் அடிக்கப்பட்டது ரசிகர்களை உற்சாகம் ஊட்டியது.
ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 80வது நாள் ஆட்டம் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் நடைபெற்றது.
33 புள்ளிகளோடு, மூன்றாம் இடத்தில் உள்ள பெங்களூரு எஃப்சியை விட நான்கு புள்ளிகள் அதிகமாகவும், முதலிடத்தில் உள்ள ஏடிகே அணிக்கு கிட்டத்தட்ட சமநிலையிலும் இருந்த கோவா எஃப்சி, முதலிடத்தை பெறும் முயற்சியில், இந்த ஆட்டத்தில் எந்த வாய்ப்பையும் நழுவ விடக் கூடாது என்ற முடிவில் இருந்தது.
கோச்சாக இருந்த சேர்ஜியோ லோபரா மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு கிளிஃபர்டு மிராண்டா வந்த பின்பும் வெற்றி பயணத்தை மாற்றமில்லாமல் தொடர்ந்து வந்ததால், இந்தப் போட்டியிலும் வெற்றி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு அந்த அணி களமிறங்கியது.
அதே சமயம், கடந்த நான்கு ஆட்டங்களில் தொடர் வெற்றியை பெற்று, 26 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருந்த மும்பை அணி, தன்னுடைய இடத்தை காப்பாற்றிக் கொள்ள தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்யத் தயாரக இருந்தது.
டாஸ் வென்ற மும்பை சிட்டி எஃப்சி அணி, இடது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தை தொடங்கியது. 18வது நிமிடத்தில் அந்த அணியின் போர்கஸ், ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை தொடங்கினார். உடனே சுதாரித்தது கோவா எஃப்சி. அந்த அணியின் கோரோ, ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையே 20வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இருபத்தி மூன்றாவது நிமிடத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணியின் சவ்கவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 35வது நிமிடத்தில் அதே அணியின் பிரதிக்குக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதற்கு பின் நடந்தது தான் அரங்கத்தையே அதிர வைத்தது. 38வது நிமிடத்தில் கோவா அணியின் பவுமஸ் ஒரு கோல் அடித்த நிலையில், 39வது நிமிடத்தில் அதே அணியின் ஜாக்கி இன்னொரு கோல் அடித்தார்.
நாற்பத்தி ஐந்தாவது நிமிடத்தில் 3 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் கோவா எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், 49வது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியை சேர்ந்த பித்யானந்தாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 51வது நிமிடத்தில் அதே அணியின் போர்கசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதனால் உற்சாகம் குறைந்து காணப்பட்ட மும்பை அணியை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக, 57 வது நிமிடத்தில் அந்த அணியின் பிபின் ஒரு கோல் அடித்தார்.
கோவா எஃப்சி தனது அணியில் 60வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. 65வது நிமிடத்தில் அந்த அணியின் பிராண்டனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 73வது நிமிடத்தில் கோவா அணி இன்னொரு மாற்றத்தை செய்தது. மும்பை எஃப்சி தனது அணியில் 75வது நிமிடத்தில் மாற்றத்தை செய்தது.
பின்னர், 78வது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் கிரிகிக்குக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 80வது நிமிடத்தில் அந்த அணி ஒரு மாற்றத்தை செய்தது. இதைத் தொடர்ந்து கோவா அணியின் கோரோ ஒரு கோல் அடித்தார். 84வது நிமிடத்தில் அந்த அணியின் செரிடானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவா ஒரு மாற்றத்தை செய்த நிலையில், 87வது நிமிடத்தில் அந்த அணியின் ரபீக் ஒரு கோல் அடித்தார்.
88 வது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்த அணியின் சுபாசிஷுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 90வது நிமிடத்தில் 5 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் கோவா எஃப்சி அணி 5-2 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Photos Courtesy : ISL Media