ஹைதராபாத் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஹைதராபாத் எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனில் முடித்தன.
ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 81வது நாள் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சிக்கு எதிரான தன்னுடைய கடந்த ஆட்டத்தை டிராவில் முடித்த ஜாம்ஷெட்பூர் எஃப்சி, 17 புள்ளிகளோடு பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்தது.
எஃப்சி கோவாவுக்கு எதிரான தன்னுடைய கடந்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்ற ஹைதராபாத் எஃப்சியோ, 6 புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருந்தது. ஹைதராபாத் எஃப்சி 16 ஆட்டங்களில் 6 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், மோசமான அணி என்னும் பெயர் எடுப்பத்தை தடுக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்தது.
அதே சமயம், டாப் நான்கில் ஒன்றாக தன்னால் இடம் பெற முடியாது தான் என்றாலும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற ஜாம்ஷெட்பூர் எஃப்சி மும்முரமாக இருந்தது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி இடது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது.
முதல் பாதி ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் கூட எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. ரசிகர்கள் சோர்ந்திருந்த சமயத்தில், ஹைதராபாத் அணியின் நெஸ்டர் 39வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
ISL 2019-20 : இந்த மேட்ச்சிலாவது ஜெயிக்குமா நார்த் ஈஸ்ட்? வீறு கொண்டு எழப் போகும் ஒடிசா.. பரபர மோதல்
நாற்பத்தி ஐந்தாவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் கரன் அமீனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஹைதராபாத் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், ஜாம்ஷெட்பூர் எஃப்சி தனது அணியில் 46வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. பின்னர் ஹைதராபாத் எஃப்சி தனது அணியில் 67வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. 70வது நிமிடத்தில் ஜாம்ஷட்பூர் அணி ஒரு மாற்றத்தை செய்தது. நாங்களும் செய்வோம் என்னும் விதமாக ஹைதராபாத் எஃப்சி தனது அணியில் 76வது நிமிடத்தில் மீண்டும் ஒரு மாற்றத்தை செய்தது.
எண்பத்து இரண்டாம் நிமிடத்தில் ஹைதராபாத் எஃப்சியின் மார்சலினோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்ட நிலையில், 83வது நிமிடத்தில் அந்த அணி கடைசி முறையாக ஒரு மாற்றத்தை செய்தது. 90வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் ஹால்டருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதே சமயம் ஜாம்ஷட்பூர் தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது.
பின்னர் 5 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. அவகாசத்தை அற்புதமாக பயன்படுத்திக்கொண்ட ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் பஸ்ஸி, ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையே ஒரு கோல் அடித்தார். ஆட்டம் முடியும் சமயத்தில், ஹைதராபாத் அணியின் சஹிலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
Photos Courtesy : ISL Media