ஹைதராபாத் : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இது வரை சிறப்பான திறமையை வெளிப்படுத்திய மும்பை சிட்டி எஃப்சி அணி, ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி விளையாட்டு அரங்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை எதிர்கொள்கிறது.
ஜார்ஜ் கோஸ்டா தலைமையிலான மும்பை சிட்டி அணியினர் கடந்த 13 ஆட்டங்களில் 19 புள்ளிகள் எடுத்து பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். இது வரை பெரிதாக சோபிக்காத ஹைதராபாத் அணியை வெல்வதின் மூலம் அவர்கள் நான்காவது இடத்துக்கு முன்னேறலாம்.
கடந்த நான்கு ஆட்டங்களில் தொடர் தோல்வியை தழுவியுள்ள ஹைதராபாத் எஃப்சி அணி, ஐஎஸ்எல் வரலாற்றிலேயே மோசமான அணி என்னும் அவப்பெயரை தடுக்க இன்னும் ஐந்து புள்ளிகள் எடுக்க வேண்டும். எனவே, அது நாளை மும்பை அணியை தனது மொத்த வலிமையையும் கொண்டு எதிர்க்கும் என எதிர்பார்க்கலாம்.
வெற்றியையும் தோல்வியையும் இது வரை மாறி மாறி சுவைத்த மும்பை அணி, தனது கடந்த போட்டியில் பெங்களூரு எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று புதிய உற்சாகத்தில் உள்ளது. ஏழு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே தோற்று 12 புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளது.
"எங்கள் மிக முக்கியமான ஆட்டத்தை நாளை எதிர்கொள்ள போகிறோம். தவறுகள் எதுவும் செய்யக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக உள்ளோம். ஹைதராபாத்தை எச்சரிக்கையுடன் எதிர்கொண்டு, கடுமையாக உழைத்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்," என்கிறார் கோஸ்டா.
மேலும் அவர் கூறுகையில், "புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் கடைசி இடத்தில் இருந்தாலும், அவர்களிடம் சிறப்பான வீரர்கள் உள்ளனர். தங்களது போட்டிகளில் வலுவான ஆட்டத்தை கடைசி வரை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எனவே, அவர்களை வெல்வது எங்களுக்கு முக்கியமானது," என்கிறார்.
கோல்களை எதிரணியினருக்கு தவற விடுவதில் மும்பை, ஹைதராபாத் இரண்டு அணிகளுமே இது வரை முன்னணியில் உள்ளனர். ஹைதராபாத் 31 கோல்களும், மும்பை அணி 21 கோல்களும் இதுவரை எதிரில் விளையாடுபவர்களுக்கு வாரி வழங்கி உள்ளனர். ஆனால், மொடோ சவுகவ் சிறப்பான ஃபார்மில் உள்ளதால், மும்பை நாளை அதிரடியாக ஆடி 3 புள்ளிகள் எடுக்க தன்னால் ஆன அனைத்து முயற்சியும் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
ஹைதராபாத்தின் இடைக்கால தலைமை கோச் ஜாவியர் குரி லோபஸ், "இது வரை நாங்கள் பல கோல்களை எதிரணியினருக்கு அளித்து இருப்பது உண்மை தான். இதற்கு யாரையும் குறிப்பிட்டு குற்றம் சொல்ல முடியாது. ஒட்டுமொத்த அணியும் முழு கவனத்தோடு, ஒருங்கிணைப்போடு ஆடினால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்கிறார்.