கோவா : மத்திய அரசின் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தலை அடுத்து இந்தியன் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் தொடர் கடந்த சில மாதங்களாக பகுதி, பகுதியாக நடைபெற்று வந்தது. 90 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கடந்த வாரங்களில் பிளே-ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.
அதன் முடிவில் ஏடிகே - சென்னையின் எஃப்சி அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
வரும் மார்ச் 14 அன்று இறுதிப் போட்டி கோவாவில் நடைபெற இருந்தது. அந்தப் போட்டியை காண ரசிகர்கள் பெரும் அளவில் ஆர்வம் காட்டி டிக்கெட் வாங்கி இருந்தனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயாக உலக சுகாதார மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வெளியிட்டது.
அதில் விளையாட்டு நிகழ்வுகளில் மக்கள் கூட்டமாக கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், ரசிகர்கள் இல்லாமல், கூட்டம் கூடாமல் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது அனைத்து விளையாட்டு அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மார்ச் 14 அன்று நடைபெற உள்ள இந்தியன் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற உள்ளதாக ஐஎஸ்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தப் போட்டி நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவியில் ஒளிபரப்பாகும். இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிக்கும் நடைமுறை விரைவில் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.