ஜாம்ஷெட்பூர் : ஐஎஸ்எல்லில் நடப்பு சீசனில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி சொந்த மண்ணில் தோல்வியே அடையாமல் பயணிக்கிறது.
கடந்த நான்கு போட்டிகளில் சொந்த மண்ணில் தோல்வி அடையாமல் ஆடி உள்ளது ஜாம்ஷெட்பூர். இந்நிலையில் திங்களன்று சென்னையின் எஃப்சி அணியை அந்த அணி சந்திக்கிறது.
ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. ஆனால் நட்சத்திர வீரர் செர்கியோ கேஸல் காயத்திலிருந்து மீளாதது ஜாம்ஷெட்பூர்க்கு பெரிய பின்னடைவு ஆகும்.
பிட்டியும் அணியில் இல்லை. இரு நட்சத்திர வீரர்கள் இல்லாவிட்டாலும் நன்றாக ஆடுவோம் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் இரியாண்டோ.
மறுபுறம் சென்னையின் எஃப்சி அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இந்நிலையில் அணியை விட்டு வெளியேறிய முன்னாள் பயிற்சியாளர் கிரிகோரிக்கு பதில் வந்துள்ள புதிய பயிற்சியாளர் காயிலுக்கு மிகப் பெரிய சவால் காத்துள்ளது.
முதல் போட்டியில் வெல்வதே இலக்கு என்கிறார் காயில். பிளே ஆஃப் பிரிவுக்குள் நுழையும் அளவுக்கு ஆட தம்மிடம் வீரர்கள் இருப்பதாக காயில் கூறுகிறார்.
வலுவான ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பயிற்சியாளர் காயில்.
ஆண்ரே ஷெம்ப்ரி அடுத்த ஆட்டத்துக்கு தயார் ஆகிவிட்டார். இந்நிலையில் எதுபோன்ற அணியை காயில் களமிறக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எது எப்படியோ ஜேஆர்டி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸி்ல் ஐஎஸ்எல் தொடரில் இன்று நல்லதொரு ஆட்டம் காத்துள்ளது என்பது மட்டும் நிஜம்.
Photos Courtesy : ISL Media