ஜாம்ஷெட்பூர் : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி அசத்தியது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 63வது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்த்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மோதியது. இந்த போட்டி ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜெஆர்டி டாடா விளையாட்டு அரங்கில் நடந்தது. பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ள கேரளா அணியும், 13 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் இருக்கும் ஜாம்ஷெட்பூர் அணியும் களத்தில் தங்கள் பலத்தை காட்டினர்.
ஆட்டம் பரபரப்பாக தொடங்கியது. 11வது நிமிடத்தில் கேரளா வீரர் மெஸ்ஸி, யாரும் எதிர்பாராத சமயத்தில் சாமர்த்தியமாக கோல் அடித்து அசத்தினார். ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேரளா அணி ரசிகர்கள் கை தட்டி ஸ்டேடியத்தை அதிரவைத்து மகிழ்ந்தனர்.
கேரளா அணிக்கு பதிலடி கொடுக்க ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் அகோஸ்டா கோல் அடித்து, கேரளா வீரர்களை திகைக்க வைத்தார். ஜாம்ஷெட்பூர் ரசிகர்கள் உற்சாகத்தில் நடனமாடி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து முதல் பாதி ஆட்ட முடிவில், இரு அணியும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது.
இந்நிலையில் 2வது பாதி ஆட்டம் தொடங்கியது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க சுறுசுறுப்பாக பந்தை கடத்தி சென்றனர். இந்த சமயத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் கண்ணில் மண்ணை தூவி, கேரளா அணி வீரர் ஒபிசே, கோல் அடித்து, எதிரணி வீரர்களை அதிரவைத்தார். இந்த கோல் மூலம் கேரளா அணி முன்னணி பெற்றது.
நேரம் நெருங்க நெருங்க ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. கேரளா அணியை சமன் செய்ய ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் கோல் அடிக்க துடித்தனர். 75வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு பெனால்டி கிடைத்தது. இந்த அருமையான வாய்ப்பை பயன் படுத்தி ஜாம்ஷெட்பூர் வீரர் காஸ்டல் கோல் அடித்து, கேரளா வீரர்களை பதறவைத்தார். மீண்டும் இரு அணியும் சமநிலைக்கு வந்தது.
இரு அணிகளுக்குள் மீண்டும் பரபரப்பு தொத்திக் கொண்டது. இதையடுத்து இரு அணியும் கோல் அடிக்க போராடினார்கள். அப்போது 87வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் ஒபிசே, சாதுரியமாக தனி ஆளாக பந்தை கடத்தி வந்து கோல் அடித்து வெற்றிக்கு முக்கிய கதாநாயகனாக விளங்கினார்.
ஆட்ட முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை மண்ணை கவ்வ வைத்தது.