கொச்சி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி 2- 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 83வது நாள் ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் 16 மேட்சுகள் ஆடி 29 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரு எஃப்சி, 16 ஆட்டங்களில் 15 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் இருந்த கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சியை நேருக்கு நேர் சந்தித்தது.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, சென்னையின் எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் 6க்கு 3 என்ற கோல் கணக்கில் தோற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு முந்தைய மூன்று ஆட்டங்களில் 12 கோல்களை எதிரணியினருக்கு விட்டுக் கொடுத்த அந்த அணி, பிப்ரவரி 7ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தை நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியுடன் விளையாடி ஒரு கோல் கூட அடிக்காமல் சமன் செய்தது.
தனக்கு கீழே 2 அணிகளே உள்ள நிலையில், கடைசி அணிகளில் ஒன்று என்ற அவப்பெயரை தவிர்க்க கேரளா பிளாஸ்டர்ஸ் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. இந்த சீசனில் சிறப்பாக விளையாடி மூன்றாம் இடத்தில் உள்ள பெங்களூரு எஃப்சி, தன்னுடைய கடந்த ஆட்டத்தில் ஏனோ சொதப்பியது.
சென்னையின் எஃப்சிக்கு எதிராக சென்னையில் ஞாயிறன்று நடைபெற்ற ஆட்டத்தை சமன் செய்த போதிலும், இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அதனால், ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி, கோவா மற்றும் ஏடிகே ஆகிய அணிகளை முந்தி முதலிடத்துக்கு வர பெங்களூரு எஃப்சி முனைப்பாக இருந்தது.
டாஸ் வென்ற பெங்களூரு எஃப்சி அணி, தனது ஆட்டத்தை தொடங்கியது. 16வது நிமிடத்தில் அந்த அணியின் பிரவுன், ஒரு கோல் அடித்து அணியின் கணக்கை தொடங்கினார்.
20வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியின் மெஸ்ஸிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. கேரளா பிளாஸ்டர்ஸ் தனது அணியில் 24வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. 36வது நிமிடத்தில் அந்த அணியின் ருத்தாராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
நாற்பத்து மூன்றாம் நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி அணியின் பிரவுனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 45வது நிமிடத்தில் 2 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. பின்னர் பெங்களூரு எஃப்சி அணியின் செரானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதற்கடுத்து, ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையே கேரளா எஃப்சி அணியின் ஒபிச்சி ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் கணக்கில் சமநிலை பெற்றிருந்தன.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில், பெங்களூரு எஃப்சி தனது அணியில் இரண்டு மாற்றங்களை செய்தது. இருப்பினும் அதனால் கேரளா அணியின் ஓபிச்சி 72வது நிமிடத்தில் ஒரு கோல் அடிப்பதை தடுக்க முடியவில்லை. 77வது நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு மாற்றத்தை செய்தன. 84வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ராகுலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
90வது நிமிடத்தில் அதே அணியின் பிலாலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 5 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஒரு மாற்றத்தை செய்தது. அந்த அணியின் டிரபரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.