கொச்சி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் சென்னையின் அணி 6 - 3 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 72வது நாள் ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச அரங்கில் இன்று நடைபெற்றது. புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடம் (14 ஆட்டங்களில் 14 புள்ளிகள்) பெற்றிருந்த கேரளா அணி, இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேற முடியும் என்ற நிலையில் இருந்தது.
பதிமூன்று ஆட்டங்களில் 18 புள்ளிகளை எடுத்திருந்த சென்னையின் எஃப்சியோ, கேரளாவை வென்றால், ஒடிஷா எஃப்சிக்கு இணையான இடத்தை பெறலாம் என்ற நிலையில் இருந்தது. மேலும், கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி ஆகியவை தென் இந்தியாவின் முக்கிய அணிகள் என்பதால் ஆட்டம் அனல் பறக்கும் என்றே எதிர்ப்பர்க்கப்பட்டது.
டாஸ் வென்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வலது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 38வது நிமிடம் வரை எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில் 39வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் கிரிவெல்லாரோ ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை அபாரமாக தொடங்கிவைத்தார். 41வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ராஜுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
நாற்பத்தி ஐந்தாவது நிமிடத்தில் சென்னையின் எஃப்சியின் வல்க்சிஸ் ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார். உடனே சற்றும் தாமதிக்காமல் கிரிவெல்லாரோ ஒரு கோல் அடிக்க சென்னையின் எஃப்சி அணியின் கோல் கணக்கு 3 ஆக உயர்ந்தது.
பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் சென்னையின் எஃப்சி அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தனது திறமையை காட்ட தொடங்கியது. 48 வது நிமிடத்தில் அந்த அணியின் ஓபிச்சி ஒரு கோல் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 57வது நிமிடத்தில் சென்னையின் அணியின் தாப்பாவுக்கும் கேரளா அணியின் மெஸ்ஸிக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்ட நிலையில், 59 வது நிமிடத்தில் சென்னையின் அணியின் சங்க்டே ஒரு கோல் அடித்தார்.
அறுபத்தி மூன்றாம் நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 65வது நிமிடத்தில் அந்த அணியின் ஓபிச்சி இன்னொரு கோல் அடித்தார். 66வது நிமிடத்திலும் 68வது நிமிடத்திலும் சென்னையின் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 75வது நிமிடத்தில் சென்னையின் அணியில் மற்றுமொரு முறை மாற்றம் செய்யப்பட்டது.
இதற்குப்பின் 76வது நிமிடத்தில் கேரளா அணியின் ஓபிச்சி ஒரு கோல் அடித்த நிலையில், 80வது நிமிடத்தில் சென்னையின் அணியின் சங்க்டே ஒரு கோல் அடித்தார். இதனால் சென்னையின் அணியின் கோல்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்த நிலையில் கேரளா அணி சுதாரிக்க தொடங்கியது. 84வது நிமிடத்திலும் 87வது நிமிடத்திலும் அது தனது அணியில் மாற்றங்களை செய்தது.
ஆட்டம் முடிவுக்கு வரும் நேரத்தில் 90வது நிமிடத்தில் 5 நிமிடங்கள் கூட்டப்பட்டன. அதே சமயம் சென்னையின் எஃப்சி அணியின் வல்க்சிஸ் ஒரு அபார கோல் அடித்தார். கூடுதல் நிமிடங்கள் முடிவுக்கு வந்த நிலையில் ஆட்டமும் முடிந்தது. சென்னையின் எஃப்சி அணி 6 - 3 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சென்னையின் எஃப்சி அணி இந்த தொடரின் துவக்கத்தில் தோல்விகளால் துவண்ட போதும், புதிய பயிற்சியாளரின் வருகைக்குப் பின் சிறப்பாக ஆடி வந்தது. அதன் உச்சமாக கேரளா அணிக்கு எதிரான போட்டியில் ஆறு கோல் அடித்து, மற்ற அணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.