கோவா : இந்தியன் சூப்பர் லீக்கின் இறுதி போட்டி நாளை கோவாவில் நடைபெற இருக்கும் நிலையில், சென்னையின் எஃப்சியின் லல்லியன்ஜீவாலா சங்க்டே மற்றும் ஏடிகே எஃப்சியின் பிரபிர் தாஸ் தங்களது அணிகளுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் நன்றாக விளையாடி வரும் சங்க்டே, இது வரை ஏழு கோல்களை அடித்துள்ளார். இந்திய வீரர்களில் ஓப்பன் பிளேயில் அதிக கோல்களை அடித்துள்ளவர் இவரே.
தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபிர் தாஸ், இந்த சீசனில் ஐந்து கோல்களுக்கு உதவி புரிந்து தன்னை செழுமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இரண்டு வீரர்களும் தத்தமது அணியில் முக்கிய இடம் பிடித்துள்ள நிலையில், எந்த அணி இறுதி போட்டியில் கோப்பையை வெல்கிறதோ, அந்த அணியை சேர்ந்தவருக்கு இன்னும் பெருமை கிடைக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இருபத்தி இரண்டே வயதான சங்க்டே, தன்னுடைய சிறப்பான சீசன்களில் ஒன்றை விளையாடி வருகிறார். கோச் ஓவன் கோய்லேவின் கரத்தை பலப்படுத்தும் வகையில் ஆடி வரும் சங்க்டே, இறுதி போட்டியிலும் தன்னை கட்டாயம் நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
"கடும் முயற்சியும், பயிற்சியும் செய்து தன்னை தானே செதுக்கிக் கொண்டுள்ளார் சங்க்டே. கடினாமான சவால்களையும் அவர் மிக எளிதாக கையாள்கிறார். அணிக்கு மிகவும் சிறப்பான பங்களிப்பை அவர் அளித்துள்ளார்," என்கிறார் கோய்லே.
ஏடிகே எஃப்சிக்கு பிரபிர் எப்போதுமே ஒரு பலம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இருபத்தி ஆறு வயதான பிரபிர், ஒரு குதிரையை போன்ற வேகத்துடனும், லாவகத்துடனும் ஆடி வருகிறார். இது கோச் ஆன்டானியோ ஹபாஸுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
"பிரபிரும், வில்லியம்ஸும் மிக சிறப்பாக விளையாடியுள்ளனர். எங்கள் அணிக்கு அவர்கள் இருவரும் கதாநாயகர்கள். கிருஷ்ணாவும் நல்ல வீரர்," என்கிறார் ஹபாஸ்.
பிரபிரும், சங்க்டேவும் எல்லா வகையிலும் சிறப்பான வீரர்கள் தான். நாளைய போட்டியில் அவர்களின் பங்களிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.
Photos Courtesy : ISL Media