மும்பை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 87வது நாள் ஆட்டம் மும்பையில் உள்ள மும்பை ஃபுட்பால் அரீனாவில் வெள்ளியன்று நடக்கிறது.
இந்த சீசனில் இதுவரை 17 மேட்சுகள் ஆடி 26 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எஃப்சி அணி, 16 ஆட்டங்களில் 25 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ள சென்னையின் எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்திக்கிறது.
இரு அணிகளுக்கிடையேயான புள்ளிகள் வித்தியாசம் மிகவும் குறைவு என்பதால், இந்தப் போட்டி சமமான பலமுள்ள அணிகளுக்கு நடுவே நடைபெறவுள்ள விறுவிறுப்பான ஆட்டம் என்னும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதோடு, இந்த ஆட்டத்தின் முடிவு தகுதி சுற்றில் இடம்பெறும் தங்களின் தலைவிதியை தீர்மானிக்கும் என்பதால் இரு அணிகளின் வீரர்களுமே கடும் பயிற்சியில் உள்ளனர்.
எஃப்சி கோவா அணியினுடனான தன்னுடைய கடந்த ஆட்டத்தில் 5-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்த மும்பை சிட்டி எஃப்சி அணி, தனது சொந்த மண்ணில் வெற்றியை சுவைத்து விட மும்முரமாக உள்ளது.
ISL 2019-20 : இதை எதிர்பார்க்கலையே.. நார்த் ஈஸ்ட் அணிக்கு ஷாக் கொடுத்த ஹைதராபாத்!
அதற்கு முந்தைய நான்கு ஆட்டங்களில் தொடர் வெற்றியை பெற்ற மும்பை சிட்டி அணி, அமின் செர்மிட்டி, டியாகோ கார்லோஸ் மற்றும் மோடோ சொகோவ் ஆகிய திறமையான வீரர்களை பெற்றுள்ள தெம்பில் சென்னையின் எஃப்சி அணியை சந்திக்கிறது.
"நாங்கள் மூன்று புள்ளிகளை பெறுவோம் என நம்பும் அதே வேளையில், இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் நம்புகிறேன்," என்கிறார் மும்பை எஃப்சி அணியின் தலைமை பொறுப்பில் உள்ள ஜார்ஜ் கோஸ்டா.
மேலும் அவர் கூறுகையில், " நாங்கள் வெற்றி பெற்றால் கட்டாயமாக முதல் நான்கு அணிகளில் ஒன்றாக வருவோம். 90-95 நிமிடங்கள் வெற்றிக்கு போதும் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்களை நாங்கள் இன்னும் செழுமை படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்," என்கிறார்.
சென்னையின் எஃப்சி அணியோ, தன்னுடைய கடந்த ஆட்டத்தில் பலம் பொருந்திய, இரண்டாம் இடத்தில் உள்ள, ஏடிகே எஃப்சி அணியையே வீழ்த்திய தெம்பில் உள்ளது. அதுவும், ஞாயிறன்று நடைபெற்ற அந்த ஆட்டத்தில், சென்னையின் எஃப்சி அணி, ஏடிகேவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஒவன் கொய்லி தலைமையிலான சென்னையின் அணி, முன்னர் நடைபெற்ற நான்கு ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்றதும் நினைவிருக்கலாம். இருந்தாலும், இடையில் நடைபெற்ற பெங்களூரு எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கோல் கூட அடிக்காமல் 0-0 என்ற கணக்கில் சமன் செய்தது.
எனவே, இந்தப் போட்டி கோல்களை அடித்து முன்னேறி தகுதி சுற்றுக்கு செல்வதற்கு சென்னையின் எஃப்சிக்கு கிடைத்துள்ள பெரிய வாய்ப்பாகும். நெரிஜுஸ் வல்க்ஸிஸ், ரஃபேல் கிரிவெல்லாரோ, லல்லியான்ஜுயாலா சங்க்டே, எலி சபியா மற்றும் லூசியன் கோயன் ஆகிய வீரர்கள் சென்னையின் எஃப்சிக்கு வலு சேர்க்கிறார்கள். அனிருத் தாபாவும், ஜெர்மன்பிரீத் சிங் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
கொய்லி கூறுகையில், "களத்தில் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த எங்களிடம் நிறைய வீரர்கள் கைவசம் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடினால் எங்களுக்கு வெற்றி நிச்சயம்," என்கிறார்.
ஒரு வேளை இந்த ஆட்டம் டிராவில் முடிந்தாலும் சென்னையின் எஃப்சி அணிக்கு தகுதி சுற்றில் இடம்பெறும் வாய்ப்பு உள்ள நிலையில், கொய்லி மேலும் கூறுகையில், "கடந்த மூன்று மாதங்களாக வாழ்வா சாவா என்ற நிலையில் தான் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இந்த போட்டியும் அப்படித் தான். வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கை நிறையவே உள்ளது," என்கிறார்.
நம்பிக்கையும், திறமையும் உள்ள இரண்டு அணிகள் மோதுகின்றன. வெற்றி யாருக்கு?
Photos Courtesy : ISL Media