மும்பை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் சென்னையின் எஃப்சி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தி பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 87வது நாள் ஆட்டம் மும்பையில் உள்ள மும்பை ஃபுட்பால் அரீனாவில் நடைபெற்றது. இந்த சீசனில் இதுவரை 17 மேட்சுகள் ஆடி 26 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருந்த மும்பை சிட்டி எஃப்சி அணி, 16 ஆட்டங்களில் 25 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் இருந்த சென்னையின் எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்தித்தது.
இரு அணிகளுக்கிடையேயான புள்ளிகள் வித்தியாசம் மிகவும் குறைவு என்பதால், இந்தப் போட்டி சமமான பலமுள்ள அணிகளுக்கு நடுவே நடைபெறவுள்ள விறுவிறுப்பான ஆட்டம் என்னும் எதிர்பார்ப்பு நிலவியது. அதோடு, ஆட்டத்தின் முடிவு தகுதி சுற்றில் இடம்பெறும் தங்களின் தலைவிதியை தீர்மானிக்கும் என்பதால் இரு அணிகளின் வீரர்களுமே கடும் முயற்சிகள் எடுத்தனர்.
எஃப்சி கோவா அணியினுடனான தன்னுடைய கடந்த ஆட்டத்தில் 5-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்த மும்பை சிட்டி எஃப்சி அணி, இந்தப் போட்டியில் தனது சொந்த மண்ணில் வெற்றியை சுவைத்து விட மும்முரமாக இருந்தது. சென்னையின் எஃப்சி அணியோ, தன்னுடைய கடந்த ஆட்டத்தில் பலம் பொருந்திய, இரண்டாம் இடத்தில் உள்ள, ஏடிகே எஃப்சி அணியையே வீழ்த்திய தெம்பில் இருந்தது.
டாஸ் வென்ற மும்பை சிட்டி எஃப்சி அணி வலது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. 45வது நிமிடம் வரை இரு அணிகளும் எவ்வளவோ முயன்றும் கோல் அடிக்க முடியாத நிலையில், 4 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. இருந்தும் கோல் எதுவும் விழவில்லை. இதை தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், 50வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் ஜெர்ரிக்கும், 52வது நிமிடத்தில் அதே அணியின் கைத்துக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 54வது நிமிடத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணியின் சௌரவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. சென்னையின் எஃப்சி தனது அணியில் 58வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது.
65வது நிமிடத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணியின் ரஃபிக்குக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. சென்னையின் எஃப்சி தனது அணியில் 65வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. 76வது நிமிடத்தில் மும்பை சிட்டி எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. 78வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் எலி சபியாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. சென்னையின் எஃப்சி தனது அணியில் 81வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது.
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த மேட்சின் முதல் கோல், சென்னையின் எஃப்சி அணியின் கோயனால் 83வது நிமிடத்தில் அடிக்கப்பட்டு ரசிகர்கள் ஒரு வழியாக ஆட்டம் முடிவை எட்டிக் கொண்டிருந்த நேரத்தில் உற்சாகம் அடைந்தனர். 90வது நிமிடத்தில் 5 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன.
சென்னையின் எஃப்சி அணியின் கிரிவெல்லாரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை சிட்டி அணியின் டியேகோவுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.