மும்பை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.
6ஆவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 32 ஆம் நாள் ஆட்டம் மும்பையில் உள்ள அரினா கால்பந்து அரங்கில் மும்பை சிட்டி எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி இடது புறம் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டத்தின் முதலாவது நிமிடத்திலேயே கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது.
ஆட்டத்தின் 19 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் டிராபுரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 24 ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் ரெய்னருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 40 ஆவது நிமிடத்தில் மும்பை அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மும்பை வீரர்கள் அந்த வாய்ப்பை இழந்தனர். ஆட்டத்தின் 44 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் போர்ஜக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி ஆட்டம் சமனில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 54 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 62 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றம் செய்யப்பட்டது.
75 ஆவது நிமிடத்தில் கேரளாவின் மெஸ்ஸி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து 77 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் செர்மிட்டி ஒரு கோல் அடித்து அசத்தினார்.
79 மற்றும் 80 ஆவது நிமிடங்களில் மும்பை மற்றும் கேரளா அணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.