கவுகாத்தி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கடைசி லீக் ஆட்டம், நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே நடைபெற்றது. இதில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.
ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 90வது நாள் போட்டி, கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்லெட்டிக் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த சீசனில் இதுவரை 17 மேட்சுகள் ஆடி 28 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருந்த சென்னையின் எஃப்சி அணி, 17 ஆட்டங்களில் 13 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் இருந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்தித்தது.
நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தின் வெற்றியால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்ற போதிலும், இந்த சீசனில் தன்னுடைய கடைசி மேட்ச் என்பதாலும், போட்டி தனது சொந்த மண்ணில் நடைபெறுவதாலும், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்னும் எண்ணத்தில் இருந்தது.
கடந்த வியாழனன்று ஹைதராபாத் எஃப்சிக்கு எதிராக கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றதால், சொந்த மண்ணில் வெற்றி பெற்று தன்னுடைய ரசிகர்களுக்கு அதை காணிக்கையாக்க வேண்டும் என்று நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி நம்பிக்கையாக இருந்தது. 13 ஆட்டங்களுக்கு முன் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெற்ற வெற்றி தான் இந்த சீசனில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் கடைசி வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தகுதி சுற்றில் இடம் பெற்று வலுவான நிலையில் உள்ள சென்னையின் எஃப்சியோ, இதில் வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்திலுள்ள பெங்களூரு எஃப்சியை முந்தலாம் என்னும் நிலையில், எப்படியாவது நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வீழ்த்த வேண்டும் என்னும் முடிவில் இருந்தது.
வெள்ளியன்று மும்பையில் நடந்த தன்னுடைய கடந்த ஆட்டத்தில், சென்னையின் எஃப்சி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதற்கு முந்தைய ஆட்டத்தில், இரண்டாம் இடத்தில் உள்ள ஏடிகே எஃப்சி அணியையும் வீழ்த்தியது. எனவே, இந்தப் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை வெற்றி பெற்று விடலாம் என்னும் நம்பிக்கையில் இருந்தது.
டாஸ் வென்ற அந்த அணி இடது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. 17வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் சாய்கனி, ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை தொடங்கினார். 33வது நிமிடத்தில் அந்த அணியின் ஜெர்மனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
41வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் டோண்டன்பாவுக்கு சிகப்பு அட்டையே காண்பிக்கப்பட்டது. 43வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் சாவேஸ் ஒரு கோல் அடித்தார். 45வது நிமிடத்தில் 2 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் கணக்கில் சமநிலை பெற்றிருந்தன.
இரண்டாம் பாதி தொடங்கிய நிலையில், இடையிடையே தூறலும் சிறு மழையும் மாறி மாறி பெய்தாலும் ஆட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. சென்னையின் எஃப்சி தனது அணியில் 69வது நிமிடத்தில் ஒரு மாற்றத்தை செய்தது. 71வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் சாவேஸ் இன்னொரு கோல் அடித்தார்.
90வது நிமிடத்தில் கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. நார்த் ஈஸ்ட் யுனைடெட் தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. இதையடுத்து சென்னையின் எஃப்சி அணியின் சங்க்டே ஒரு கோல் அடித்தார். பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.